மீண்டும் புயல் சின்னம்: சென்னையில் மழை
சென்னை:
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால் சென்னை நகரில் புதன்கிழமை காலைமுதல் மழை பெய்து வருகிறது.
கடந்த வாரம் சென்னையில் பேய் மழை மற்றும் சூறைக் காற்றினால் நகரமே வெள்ளக் காடாக மாறியது.அதிர்ஷ்டவசமாக சென்னையத் தாக்கவிருந்த புயல், ஆந்திர கடற்கரையில் கரை கடந்தது.இதனால் சென்னை நகரம் தப்பியது. மழை ஓய்ந்து கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் அடித்துவந்தது. இந்தச் சூழ்நலையில், இன்று காலை முதல் சென்னை நகரில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கையில், வங்கக் கடலில் சென்னைக்கும்,ஆந்திராவுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இது பலவீனமாகவே இருக்கிறது. என்றாலும் கூட சென்னை நகரிலும், வடக்கு கடலோர மாவட்டங்களிலும்லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. உட்புற தமிழகத்திலும் லேசான மழை இருக்கும்.
இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும். கன மழைக்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கன மழையாகஇல்லாவிட்டாலும் கூட காலை முதல் மழை பெய்து வருவதால், மீண்டும் பேய் மழை பெய்யுமோ என்ற பயத்தில்சென்னை மக்கள் உள்ளனர்.