அதிமுக கூட்டணியில் சேர தயார்: திருமாவளவன்
திட்டக்குடி:
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட மாட்டோம். திமுக அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெறுவோம்என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
யாழ்பாணம் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தேன் என்று கூறியுள்ள திருமாவளவனுக்கு எதிராக ஜனதாகட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமியும், பாஜகவும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன.அவரைக் கைது செய்ய வேண்டும் என சு.சுவாமியும், பாஜக எம்எல்ஏ எச்.ராஜாவும் கோரியுள்ளனர். இந் நிலையில் திட்டக்குடியில்நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
தமிழ் தேசியத்துக்கும், தமிழ் தேசியத்தை பிடிக்காதவர்களுக்கும் இடையே இப்போது போர் தொடங்கியுள்ளது.
இங்கு ஆபாசம் பேசினால் பிடிக்கிறது. தமிழ் பேசினால் கொச்சை என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்துகின்றனர். அந்தக் கும்பல் தான் தமிழர்ஒற்றுமையைக் குலைக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றியெல்லாம் சுகாசினி போன்ற நடிகைகளுக்கு கவலையில்லை.தமிழர்களைக் கேவலப்படுத்திய குஷ்புவுக்கு ஆதரவாக வக்காலத்துக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார். தமிழர்களை கிழித்துவிடுவேன்என்கிறார்.
சுகாசினியின் இந்த ஆணவப் பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்காமல் அமைதி காக்கின்றனர். இதற்கு தமிழகமக்கள் உரிய நேரத்தில் பதில் கொடுப்பார்கள்.
தமிழக மக்களுக்கு கொம்பு முளைத்திருக்கிறேதோ இல்லையோ சொரணை உள்ளவர்கள் என்பதை நிரூபிப்பார்கள். குஷ்பு, சுகாசினி நடித்த,நடிக்கும் படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பிரச்சாரம் செய்வோம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட மாட்டோம். திமுக அல்லது அதிமுக தலைமையிலான ஒரு அணியில் தான் இடம்பெறுவோம். அதே நேரத்தில் தலித்துகளை ஓட்டு வங்கியாகக் கருதாத அணியில் தான் சேருவோம்.
மருத்துவர் ராமதாசு தனது கூட்டணியில் சேர எங்களை அழைக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி என்றார் திருமாவளவன்.
திருமாவளவனை திமுக கூட்டணிக்கு வருமாறு ராமதாஸ் அழைத்தாலும் இன்னும் கருணாநிதியிடம் இருந்து அழைப்பு வரவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும் என கருணாநிதி கூறிவிட்டது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications