மதுரை, சிவகங்கையில் வரலாறு காணாத மழை: தமிழகம் முழுவதும் கொட்டோ கொட்டு
மதுரை:
சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்து வருகிறது. இம்மாவட்டத்தில் பல குளங்கள்உடைப்பெடுத்துவிட்டதால் ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி வருகிறது. இம் மாவட்டத்தில் தேவகோட்டையில்தான் மிக அதிகபட்சமாக 177 மிமீ மழை (சுமார் 13 செ.மீ) பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மதகுபட்டியில் 172 மிமீயும்,ஒக்கூரில் 137 மிமீ மழையும் பெய்துள்ளது.புதுவயலில் 80 மிமீயும், சிவகங்கை பகுதியில் 65 மிமீ மழையும், காளையார் கோவிலில் 52 மிமீயும் திருபுவனத்தில் 42மிமீயுமாக மழை கொட்டிவிட்டது.
இதனால் இந்த ஊர்களில் குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது.
மதுரை மாவட்டத்தில் தனியமங்கலத்தில் 115 மிமீயும், சிட்டம்பட்டியில் 110 மிமீயும், மேலூரில் 110 மிமீயும், கள்ளந்திரியில் 96மிமீயும், மதுரை நகரில் 84 மிமீ மழையும் பெய்துள்ளது.
மேட்டுப்பட்டியில் 65 மிமீயும், புலிப்பட்டியில் 63 மிமீயும், ஆண்டிப்பட்டியில் 55 மிமீயும், பேரனையில் 61 மிமீயும்,பெரியகுளத்தில் 48 மிமீயும், வைகை டேம் பகுதியில் 30 மிமீயும்யும் மழை பெய்துள்லது.
தேனியில் 33 மிமீயும், போடியில் 30 மிமீயும், மயிலாடும்பாறையில் 26 மிமீயும், தேக்கடியில் 25 மிமீயும்யும் மழை பெய்துள்ளது.
அதே போல தொழுதூரில் மிக அதிக அளவாக 17 செமீ மழையும், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை, திண்டுக்கல்லில் 15 செ.மீ.மழையும் பெய்தது. தஞ்சாவூர், விருதாச்சலம், கள்ளக்குறிச்சியில் 14 செ.மீ மழை பெய்துள்ளது.
பெரியாறு அணையின் நீர் மட்டம் 123 அடியாக உயர்ந்துள்ளது. இதன் முழுக் கொள்ளவு 136 அடியாகும். அதே போல வைகைஅணையின் நீர் மட்டம் 56 அடியாக உயர்ந்துள்ளது. இதன் கொள்ளளவு 71 அடியாகும்.
மேலே குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டுள்ளது. அதே போல பாண்டிச்சேரியிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,
வங்கக் கடலில் வலுவிழந்துவிட்ட புயல் சின்னம் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது விலகிச் செல்வது வரை அல்லது கலையும் வரை தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. உட்புறமாவட்டங்களிலும், கடலோரங்களிலும், சென்னையிலும் இந்த மழை நீடிக்கும் என்றார்.
மழை காரணமாக பல மாவட்டங்களில் இன்று மூன்றாவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications