நியூயார்க் விமானத்தில் மப்பு பார்ட்டி ரகளை
சென்னை:
சென்னையில் இருந்து நியூயார்க் செல்ல இருந்த விமானத்தில் குடித்துவிட்டு ரகளை செய்த பயணியை அதிகாரிகள் இறக்கிவிட்டனர்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த அங்கப்பன் என்பவர் நியூயார்க் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். 65 வயதாகும்அவர் குடித்து விட்டு முழு மப்பில் தான் விமான நலையத்திற்கு வந்திருந்தார்.நியூயார்க் விமானத்தில் ஏறிய அவர் தனது இருக்கையில் அமர்ந்தார். விமானம் கிளம்பும் முன்பு, அனைவரும் தங்களதுபெல்ட்டை அணியுமாறு அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைக் கண்டு கொள்ளாத அங்கப்பன், தனது இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.
சரக்கு உள்ளே போனதும், குடிபோதையில் சக பயணிகளிடம் ரகளை செய்ய ஆரம்பித்தார்.
இதையடுத்து விமான நிலைய மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விமானி தகவல் கொடுத்தார்.
அவர்கள் விரைந்து சென்று அங்கப்பனை விமானத்திலிருந்து கீழே இறக்கினர். அதன் பின்னர் விமானம் நியூயார்க் புறப்பட்டுச்சென்றது.
குடிபோதையால் ரகளை செய்து இறக்கி விடப்பட்ட அங்கப்பன் விமான நிலையத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்து தனக்குத்தானேபுலம்பிக் கொண்டிருந்தார்.
குடிப்பது எனது பிறப்புரிமை, அது குற்றமா, யார் தடுத்தாலும் நான் குடிப்பேன் என்று புலம்பிக் கொண்டிருந்த அவரைபாதுகாவலர்கள் அங்கிருந்து கிளம்பிப் போகச் செய்தனர். அங்கப்பன் செய்த அலம்பலால் நியூயார்க் விமானம் ஒரு மணி நேரம்தாமதமாக புறப்பட்டுச் சென்றது.