மேலிடத்திற்கு பதில் அனுப்பினார் திண்டிவனம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி தொடர்பாக கருத்துக் கூறியதற்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் அனுப்பிய கடிதத்திற்குப் பதில்அளித்து விளக்கம் அனுப்பியுள்ளதாக முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் விவகாரம் தொடர்பான எந்தவொரு முடிவும் திமுக தலைவர் கருணாநிதியின் ஆலோசனையின் பேரில்தான்எடுக்கப்படுகிறது என்று சமீப காலமாக திண்டிவனம் ராமமூர்த்தி கூறி வருகிறார். மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியில்,கருணாநிதியின் பேச்சைக் கேட்டு வன்னியர்களை கட்சி மேலிடம் புறக்கணித்து வருவதாகவும் அவர் கூறி வந்தார்.திண்டிவனத்தின் இந்தப் போக்கு குறித்து திமுக சார்பில் கட்சி மேலிடத்திடம் புகார் கூறப்பட்டதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து தனது பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி திண்டிவனத்திற்கு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீஸ் இதுவரை தனக்கு வரவில்லை என்றும், கருணாநிதி குறித்த தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும்திண்டிவனம் தெரிவித்திருந்தார். இந் நிலையில் திங்கள்கிழமை தனக்கு கட்சி மேலிடத்தின் நோட்டீஸ் வந்ததாகவும், அதற்குரியவிளக்கத்தை தான் அனுப்பி விட்டதாகவும் தற்போது திண்டிவனம் தெரிவித்துள்ளார்.
என்ன மாதிரியான விளக்கம் கேட்கப்பட்டது, என்ன பதில் அனுப்பினீர்கள் என்று கேட்டபோது, அதுகுறித்து இப்போது கூறமுடியாது. அதை வெளியில் சொல்ல முடியாது என்று திண்டிவனம் ராமமூர்த்தி கூறினார்.