உருவானது இன்னொரு புயல் சின்னம்!!!!!
சென்னை:
வங்கக் கடலில் மீண்டும் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மற்றும் மிக பலத்த மழை பெய்யும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யத்தில் சமீபத்தில் ஃபனூஸ் புயல் கரையைக் கடந்தது. இருப்பினும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதுதொடர்ந்து கொண்டிருப்பதால், தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந் நிலையில் வங்கக் கடலில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சிமைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தென் மேற்கு வங்கக் கடலில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன்காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. தென்மாவட்டங்களிலும் பரவலாக பலத்த மழை பெய்யும் என்றார்.
ஃபனூஸ் புயலில் இருந்து தமிழகம் மயிரிழையில் தப்பிய நிலையில் புதிதாக ஒரு புயல் சின்னம் உருவாகியிருப்பது தமிழகமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.