முகம்மது அலி மீது சிபிஐ குற்ற பத்திரிக்கை
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் டிஐஜி முகம்மது அலி உள்ளிட்ட 11 பேர் மீது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கியப் புள்ளிகளும் சிக்கினர்.சிபிசிஐடி பிரிவு டிஐஜி முகம்மது அலி, டிஎஸ்பி சங்கர், மதுரை எல்.ஐ.சி அதிகாரி சாஹு உள்ளிட்டோர் பிடிபட்டனர்.இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து குற்றப் பத்திரிக்கை தயாரிக்கப்பட்டது. இந் நிலையில், முகம்மது அலி ஐ.பி.எஸ்.அதிகாரி என்பதால் அவர் மீது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி தேவை என்பதால் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாமல் சிபிஐ காத்து வந்தது.
இந் நிலையில், நேற்று கம்மது அலி மீது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது.இதையடுத்து இன்று சென்னை எழும்பூரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
முகம்மது அலி, சங்கர், சாஹு, அப்துல் கரீம் தெல்கி, நிஜாமுதீன், அவரது மனைவி தஸ்லீன் உள்ளிட்ட 11 பேர் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர். குற்றப் பத்திரிக்கையை நீதிபதி தட்சிணாமூர்த்தி ஏற்றுக் கொண்டார்.
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்ததாக முகம்மது அலி மீது கூடுதலாக ஒரு வழக்கும் பதிவுசெய்யப்பட்டு, தனியாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மொத்தம் 3,000 பக்கங்களைக் கொண்டதாக இந்தக் குற்றப் பத்திரிக்கை உள்ளது. 190 சாட்சிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.340 ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.