மாணவிக்கு காதல் கடிதம்: மாணவன் டிஸ்மிஸ் சரியே - உயர்நீதிமன்றம்
சென்னை:
9வது வகுப்பு படிக்கும் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த மாணவனை பள்ளியிலிருந்து நீக்கியது சரியான செயல்தான் என்றுசென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரக்கோணத்தில் உள்ள புனித இருதயம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 9வது வகுப்பு படித்து வந்தவர் பிரசன்னா. இவர்தன்னுடன் படித்த சக மாணவி ஒருவருக்கு காதல் கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தை மாணவியின் ஜாக்கெட்டில் வைத்துள்ளார்.இதனால் அவமானமடைந்த அந்த மாணவி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தார். புகாரை தலைமை ஆசிரியர் மற்றும்பள்ளி நிர்வாகத்தினர் விசாரித்தனர்.
விசாரணையில் மாணவர் பிரசன்னா இதுபோல பல மாணவிகளிடம் காதல் குறும்பு செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்துபிரசன்னாவை பள்ளியிலிருந்து நீக்கினர்.
இதை எதிர்த்து பிரசன்னாவின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனது மகன் தவறு செய்யவில்லை என்று தனதுமனுவில் பிரசன்னாவின் தந்தை குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தினகரன், மாணவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காரணத்தால்தான் அவரை நீக்கியுள்ளனர்.அது சரியான செயல்தான். அதேசமயம் மாணவனின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே அவரது மாற்றுச் சான்றிதழில் (டி.சி.) எந்தவிதக் குறிப்பையும் பள்ளி நிர்வாகம் எழுதக் கூடாது. வேறு பள்ளியில்அம்மாணவன் சேர எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தார்.