துறைமுகத்தில் மீனவர் படகு மீது துப்பாக்கிச் சூடு
சென்னை:
சென்னை துறைமுக எல்லைக்குள் வந்த மீனவர் படகு மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
துறைமுக எல்லைக்குள் மீனவர்கள் உள்ளிட்ட யாரும் நுழையத் தடை உள்ளது. துறைமுகத்தில் நிறுத்தப்படும் கப்பல்களில் திருட்டுபோவதை தடுக்கவும் துறைமுகப் பாதுகாப்பு கருதியும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று நள்ளிரவு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துறைமுக எல்லைப்பகுதியில் ஒரு படகு வந்தது. இதை பார்த்த ரோந்து படையினர் படகை நிறுத்தும் படி எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் படகை வேகமாக அவர்கள் ஓட்டிச் சென்றுள்ளனர். இதனால் படகில் உள்ளவர்கள்தீவிரவாதிகளாக இருப்பார்களோ என்று சந்தேகத்தில் பாதுகாப்பு படையினர் சரமாரியாக சுட்டனர். ஆனால் படகில்இருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அந்த படகில் இருந்தவர்கள் வடசென்னை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என்று கூறப்படுகிறது. மீனவர்கள் மீது துப்பாக்கி சூடுநடத்தப்பட்டதால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.