ஏமாற்றியது பா.பிளாக்: கார்த்திக் புதுக் கட்சி!
மதுரை:
பார்வர்ட் பிளாக் கட்சியில் தனக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைப்பது மிகவும் கடினம் எனத் தெரிய வந்துள்ளதாலும், புதுக்கட்சி தொடங்குமாறு ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலும், புதுக் கட்சி தொடங்கும் முடிவுக்கு நடிகர் கார்த்திக்வந்துள்ளார்.
இதுதொடர்பாக விரைவில் அவர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.புதுக் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் கார்த்திக், அதிக ரிஸ்க் எடுக்காமல், ஏற்கனவே தேவர் சமூகத்தினர்மத்தியில் செல்வாக்குடன் உள்ள பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைய முடிவு செய்தார்.
தனக்கு மாநிலப் பொதுச் செயலாளர் பதவி கொடுத்தால் கட்சியில் சேருவதாக பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசியத் தலைவர்பிஸ்வாஸுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
ஆனால் கார்த்திக்குக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்க தமிழ் மாநில பொதுச் செயலாளர் சந்தானம் (தற்போது எம்.எல்.ஏவாகஉள்ளார்) கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந் நிலையில், பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் மதுரையில் நடந்தது.
அதில் மேற்கு வங்க அமைச்சரும் பார்வர்ட் பிளாக் மூத்த தலைவருமான நரேன் தேவ், தமிழக பார்வையாளர் தேவராஜன்,சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் தனக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுப்பது குறித்து முடிவு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த, கார்த்திக்கும்மதுரை வந்திருந்தார்.
பார்வர்ட் பிளாக் கூட்டம் நடந்த இடத்தில் கார்த்திக்கின் ஆதரவாளர்கள், ரசிகர்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். ஆனால்இக்கூட்டத்தில் கார்த்திக்குக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்க சந்தானத்தின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கட்சியில் திடீரென சேர்ந்தவருக்கு பொதுச் செயலாளர் பதவியை கொடுத்தால் பழைய நிர்வாகிகள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுவிடும். எனவே அதற்கு மாநிலக் குழு ஒப்புதல் வழங்கக் கூடாது என்று சந்தானம் ஆதரவாளர்கள் கூறினர்.
இதனால் கார்த்திக் விவகாரம் குறித்து முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
இந்தத் தகவல் கிடைத்தவுடன், கார்த்திக் திருப்பரங்குன்றத்தில் ரசிகர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போது, எனக்கு பதவி கிடைக்காவிட்டால் உங்களது ஆதரவுடன் புதுக் கட்சி தொடங்குவேன். எனவே கவலைப்படவேண்டாம் என அவர்களிடம் தெரிவித்தார். இதைக் கேட்டதும் ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷமிட்டனர்.
இதையடுத்து மதுரையில் தான் தங்கியிருந்த ஹோட்டலிலும், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்கார்த்திக்.
மதுரை ஏமாற்றத்தைத் தொடர்ந்து சென்னைக்குக் கிளம்பியுள்ளார் கார்த்திக். அங்கும் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த மாதஇறுதியில் புதுக் கட்சி குறித்த அறிவிப்பை அவர் வெளியிடக் கூடும் என கார்த்திக் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புநிலவுகிறது.