தலைமை நீதிபதிகள் மீது ராமதாஸ் பாய்ச்சல்
சென்னை:
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தவறு செய்கிறார்கள் என்று பாமகநிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர்கள் உள்ளிட்ட பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை நீதிபதிகளாக நியமிக்க வலியுறுத்தி,பாமகவின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை மெமோரியல் ஹால் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை ராமதாஸ் தொடங்கி வைத்துப் பேசுகையில்,
உயர்நீதிமன்ற நீதிபதியாக 42 வயதிலேயே ஒருவரை நியமித்து விடுகிறார்கள். இதன் மூலம் அந்த நீதிபதி உச்சநீதிமன்றநீதிபதியாகும் தகுதியைப் பெற்று விடுகிறார்.
குறிப்பிட்ட சில ஜாதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அதிக அளவில் நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இதற்கு ஏராளமானசான்றுகள் உள்ளன. இதற்குக் காரணம் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருப்பவர்கள்தான்.
அவர்கள் செய்யும் தவறுகள் சமூக ஏற்றத்தாழ்வுக்கு வழி வகுக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்றார் ராமதாஸ்.
ராமதாஸின் இந்தப் பேச்சு நீதித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.