மதுரை சாப்ட்வேர் என்ஜினியர் அமெரிக்காவில் சுட்டு கொலை
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் பொறியாளர் அமெரிக்காவில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மேலூரைச் சேர்ந்த ராமசுப்ரமணியன்- ஜெயலட்சுமி தம்பதியின் மகன் சரவணன். 32 வயதாகும் சரவணன் அமெரிக்காவின்டெக்சாஸ் மாகாணாத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அவருக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இந் நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு சரவணனின்மேலூர் வீட்டுக்கு போன் வந்தது.
அதில் பேசிய சரவணனின் அமெரிக்க நண்பர்கள், வேலை முடிந்து தனது அறையில் சரவணன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது சில திருடர்கள் அங்கு வந்தாகவும், பணம் கேட்டு சரவணனை மிரட்டியுதாகவும், அவர் பணம் இல்லைஎன்று கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள் சரவணனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டதாகவும் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அவரது குடும்பத்தினர் அலறித் துடித்தனர். சரவணனின் உடலை மேலூருக்குக் கொண்டு வரும் முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. சரவணன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படித்தவர் ஆவார்.
2001ல் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தின் மீது அல்-கொய்தா விமானத் தாக்குதல் நடத்தியபோது, அன்றைய தினம்அலுவல் நிமித்தமாக அந்தக் கட்டடத்தில் இருந்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.