மோனோ ரயில்: மலேசிய நிறுவனத்துடன் ரகசிய ஒப்பந்தம்: கருணாநிதி
சென்னை:
சென்னை நகரில் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்படவுள்ள மோனோ ரயில் திட்டம் தொடர்பாக ஏற்கனவே மலேசியாவைச்சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில், சென்னை நகரில் மோனோ ரயில் திட்டத்தை சென்னைமாநகர போக்குவரத்துக் கழகம் தனியார் உதவியுடன் நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளனர்.இந்தத் திட்டத்திற்கான டெண்டர் இப்போது தான் விடப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே மலேசியாவைச் சேர்ந்த ஒருநிறுவனத்துடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 20,000 கோடி ஆகும். அதில் ரூ.1000 கோடி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு முக்கியப்புள்ளிக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தான் பிடித்த முயலுக்கு 3 கால்கள் தான் இந்த அரசு பிடிவாதமாக இருந்து, போகியன்று ஆளுநர் உரையை நிகழ்த்தி முடித்துவிட்டது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி 20ம் தேதி மாலை இடைக்கால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து விட்டு, மறு நாள்காலையிலேயே விவாதம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
நுழைவுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பான அவசரச் சட்டத்தை நிறைவேற்றும் முன், எந்தவிதக் குழப்பம் இல்லாதஅளவுக்கு, சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு, கல்வியாளர்களையும், ஆசிரியர்களையும் கலந்து பேசி கொண்டு வரவேண்டும்.
அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த அரசு படுத்திய பாட்டினை சரிக்கட்டுவதற்காகவே, அவர்களுக்கு 4 சதவீத அக விலைப்படி உயர்வை அரசு அறிவித்துள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.