திருச்சி திமுக மாநாட்டில் தேர்தல் அறிக்கை: சோனியா பங்கேற்கிறார்
சென்னை:
திருச்சியில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள திமுக மாநில மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ளவுள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த இக் கூட்டத்தில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.திருச்சியில் நடைபெறவுள்ள மாநில மாநாடு, தேர்தல் வியூகம், தேர்தல் நிதி, கட்சிப் பணிகள், கோஷ்டிப் பூசல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
இக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், திருச்சி திமுக மாநாடு மார்ச் 3ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறும். முதல் நாள் திமுக பொதுக் குழு கூடும். மாநில இளைஞர் அணி வெள்ளி விழா மாநாடும் நடக்கும்.
மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவரும் கலந்து கொள்வதாக சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த மாநாட்டிலேயே திமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும்.
தொகுதிப் பங்கீடு குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன்தான் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மாநாட்டுக்கு முன்னதாகவே தொகுதிப் பங்கீட்டை முடித்துவிடவும் திட்டமிட்டிருக்கிறோம்.
கூட்டணி ஆட்சியை, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எந்தக் கட்சியும் விரும்பவில்லை. எனவே அந்தக் கேள்விக்கே இடமில்லை. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரவும் வாய்ப்புள்ளது என்றார் கருணாநிதி.
புதிதாக சேரும் கட்சிகளுக்கு போட்டியிட ஒதுக்குவதற்கு தொகுகள் இருக்கின்றனவா? என்று கேள்விக்கு, சட்டி இருக்கிறது. அதில் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்றார்.
கார்த்திக்கும் பார்வர்ட் பிளாக் தலைவர் பிஸ்வாசும் உங்களை சந்தித்தார்களே. கூட்டணி குறித்து பேசினார்ளா என்று கேட்டதற்கு, திமுகவும் பார்வர்ட் பிளாக்கும் சில அரசியல் சூழல்களால் தமிழ்நாட்டில் உறவுடன் இல்லை. எதிர்காலத்தில் அத்தகைய உறவு அமைய வேண்டும் என்று நானும் பிஸ்வாசும் ஒருமித்த கருத்து கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் தான் சந்திப்பு நடந்தது. கூட்டணி குறித்து பேசவில்லை என்றார் கருணாநிதி.
தொகுதிப் பங்கீடு: ஆற்காடு தலைமையில் குழு
இதற்கிடையே கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த பொருளாளர் ஆற்காடு வீராசாமி தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார் கருணாநிதி.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கருணாநிதி ஏற்கனவே இரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து விட்டார். இந் நிலையில் திமுக சார்பில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் குழுவு பொருளாளர் ஆற்காடு வீராசாமி தலைமையில் செயல்படும். இந்தக் குழுவில், ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம், மத்திய அமைச்சர் ஏ.ராஜா, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அதிமுக சார்பில் தேர்தல் டிக்கெட் பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து விட்டார்.
விஜயகாந்த் கட்சியும் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந் நிலையில் திமுகவும் தேர்தல் பணிகளில் நேரடியாக குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பேரறிஞர் அண்ணாவின் 37வது நினைவு நாளையொட்டி பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் கருணாநிதி தலைமையில் அமைதிப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications