செங்கடலில் கப்பல் மூழ்கி 1,000 பேர் பலி
கெய்ரோ:
செளதி அரேபியாவிலிருந்து எகிப்து நாட்டின் சஃபாகா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல், செங்கடலில் மூழ்கியது. இதில் 1,000 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கப்பல் மூழ்கிய இடத்தில் மிதக்கும் நூற்றுக்கணக்கான உடல்களை மீட்புப் படையினர் கடுமையாகப் போராடி மீட்டு வருகிறார்கள்.
செளதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு புனித யாத்திரை வந்த பல்வேறு ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த அல் சலாம் என்ற கப்பல் மூலம் எகிப்து நாட்டின் சஃபாகா நகருக்கு பயணித்தனர்.
இந்தக் கப்பலில் 1,272 பயணிகள், 100 ஊழியர்கள் இருந்தனர். கப்பல், செளதியிலிருந்து கிளம்பிய சிறிது நிேரத்திலேயே ரேடாரின் பார்வையிலிருந்து மறைந்து விட்டது. இதையடுத்து கப்பலின் கதி குறித்து தீவிரமாக ஆராயப்பட்டது.
அப்போதுதான் செங்கடலில் கப்பல் மூழ்கியது தெரிய வந்தது. இதையடுத்து எகிப்து, செளதி, ஜோர்டான் நாடுகளில் இருந்து மீட்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களில் விரைந்து வந்தனர்.
கடலில் கப்பல் கவிழ்ந்ததும் பல பயணிகள் உயிர் காக்கும் படகுகள் மூலம் கடலில் குதித்துள்ளனர். அவர்களில் சுமார் 100 பேர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 180 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் கடலில் மிதந்து கொண்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.
கடலில் மூழ்கிய படகு 35 வருடம் பழையதாகும். இத்தாலியில் கடந்த 1970ம் ஆண்டு இந்தக் கப்பல் கட்டப்பட்டது. 1998ம் ஆண்டு இந்தக் கப்பலை அல் சலாம் கப்பல் கம்பெனி விலைக்கு வாங்கியது.
இக்கப்பலில் பயணம் செய்தவர்களில் 1,158 பேர் எகிப்தியர்கள், 99 பேர் செளதியைச் சேர்ந்தவர்கள், 6 பேர் சிரியா நாட்டினர், நான்கு பேர் பாலஸ்தீனியர்கள், ஐந்து பேர் கனடா, ஏமன், ஓமன், சூடான் மற்றும் ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள்.