மது ஆலை: ஜெ விளக்கம் தரணும்-இல.கணேசன்
சென்னை:
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பெரும் அதிருப்தியில் உள்ளன. தேர்தலுக்குள் இந்த கூட்டணி உடைந்து விடும் என அகிலஇந்திய பாஜக துணைத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக கூட்டணியில் உள்ள பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட்கட்சிகள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிருப்தியில் உள்ளன. காங்கிரஸ் கட்சியிலும் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.இந்தக் கட்சிகள் அனைத்தும் தங்களுக்குத் திருப்தி தரும் வகையிலான தொகுதிகள் கிடைக்காவிட்டால் அணி மாறக்காத்திருக்கின்றன. தேர்தலுக்குள் இந்தக் கூட்டணி உடைந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சட்டசபைத் தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிடும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான தயார்நிலையில் இருக்குமாறு (அம்புட்டு ஆள் இருக்கா?) கட்சியினருக்கு நாங்கள் ஏற்கனவே அறைகூவல் விடுத்துள்ளோம்.
மிடாஸ் மதுபானத் தொழிற்சாலை குறித்து தமிழக அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். மிடாஸ் மதுபானத்தொழிற்சாலையில் மட்டும் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், மதுபானங்களை வாங்குவது ஏன் என்பதை விளக்க வேண்டியதுஅரசின் கடமை.
சட்டசபையில் அரசைப் பாராட்டி பாஜக எம்.எல்.ஏக்கள் பேசியதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அது அவர்களது சொந்தக்கருத்து, கட்சியுடைய கருத்து அல்ல என்றார் இல.கணேசன்.