அரசு ஊழியர் மாநாடு- ஜெ. அள்ளி வீசும் சலுகை
சென்னை:
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மாநாடு இன்று சென்னையில் நடக்கிறது.
தமிழக அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கில் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டபோதும், பின்னரும் ஜெயலலிதாவை தீவிரமாகஆதரித்தவர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவரான சூர்யமூர்த்தி. இடையிடையே அரசுக்கு எதிராக அறிக்கைவிட்டாலும், பெரும்பாலும் அம்மா துதியே பாடி வந்தார்.இச் சங்கத்தின் சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொது மாநாடு இன்று சென்னை கோயம்பேட்டில் நடைபெறுகிறது.முதல்வர் ஜெயலலிதா இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
தேர்தலை மனதில் வைத்து பல சலுகைகளை அறிவித்து வரும் ஜெயலலிதா, அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்விதமாக இன்று பல்வேறு சலுகைகளை அவர் அறிவிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
இந்த மாநாடு கடந்த டிசம்பர் மாதமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மாநாடு நடத்துவதாகக் கூறி அரசு ஊழியர்களிடம்கறார் வசூலில் சூர்யமூர்த்தி இறங்கியதாக தகவல்கள் வந்தன. கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்தபோது பலகோடி ஸ்வாஹா செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சூர்யமூர்த்தியின் இந்த வசூல் அரசு ஊழியர்களிடையே அதிருப்தியைஉருவாக்கியது.
இதையடுத்து கன மழையைக் காரணம் காட்டி மாநாட்டுக்குத் தந்த தேதியை முதல்வர் ஜெயலலிதா திரும்பப் பெற்றார். இதைத்தொடர்ந்து பொன்னையனைப் பிடித்து அவர் மூலமாக மீண்டும் மாநாட்டுக்கு முதல்வரின் அனுமதியை வாங்கினார் சூர்யமூர்த்தி.
இத்தனை சிக்கல்களுக்கு இடையே இன்று இந்த மாநாடு நடைபெறுகிறது. அரசின் முழு ஆசிர்வாதத்தோடு நடக்கும் மாநாடுஎன்பதால் இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோயம்பேடு மார்க்கெட் மைதானத்தில் இதற்காக பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் பேரணி:
மாநாட்டையொட்டி இன்று காலை விருகம்பாக்கம் ஆவிச்சி மேல்நிலைப்பள்ளி அருகே அரசு ஊழயிர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்ட பேரணி தொடங்கியது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரணியை தொடங்கி வைத்தார்.
இப் பேரணி மாநாடு நடக்கும் திடலில் சென்று முடிவடைந்தது.
பெண் ஊழியர்கள் பச்சை (அம்மாவுக்குப் பிடித்த வண்ணம்) நிற சேலை மற்றும் வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்து ஊர்வலத்தில்கலந்து கொண்டனர். முதல்வரை வாழ்த்தும் பேனர்கள், தட்டிகளை ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் ஏந்திச் சென்றனர்.
பேரணியின் முடிவில் மாநாட்டுத் திடலில் வெண் புறாக்கள் பறக்க விடப்பட்டன. அரசு, அரசு ஊழியர் நல்லுறவை பாராட்டும்வகையில் இந்த அமைதிப் புறாக்களாம்.
இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகளை (?) வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் நன்றி சுடரொளி ஏற்றப்பட்டது.
வாழ்த்தரங்கத்துடன் தொடங்கிய மாநாட்டில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பேசி வருகிறார்கள். மாலையில் சூரியமூர்த்திதலைமை வகிக்க இறுதியாக முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றுகிறார்.
அப்போது சுமார் 1 லட்சம் தாற்காலிக அரசு ஊழியர்களை நிரந்தரமாக்கும் அறிவிப்பை ஜெயலலிதா வெளியிடுவார் என்றுதெரிகிறது. அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோது நியமிக்கப்பட்ட தாற்காலிக ஊழியர்கள் இப்போது குறைந்தஊதியத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களது பணி நிரந்தரமாக்கப்படலாம் என்று தெரிகிறது.
மேலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணியிடங்களும் நிரந்தரமாக்கப்படலாம்.
இந்த நம்பிக்கையுடன் தாற்காலிக, தொகுப்பூதிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க மாநிலத்தின்பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னையில் குவிந்துள்ளனர்.
இன்றைய மாநாட்டில் அண்ணா, எம்.ஜி.ஆர்., சிவ. இளங்கோ ஆகியோரது உருவப் படங்களை ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாநாடு என்றாலும் என்ஜிஓ எனப்படும் சூர்யமூர்த்தி தலைமையிலான தமிழ்நாடு அரசுஅலுவலர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களே இதில் பெரும்பாலும் பங்கேற்கின்றனர்.
இதற்கிடையே மாநாட்டில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அரசு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவுஊழியர்கள் மிரட்டப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால், சுய விருப்பத்தின் பேரிலேயே மாநாட்டில்பங்கேற்கிறேன் என்று எழுதித் தர வேண்டுமாம்.
மாநாட்டுக்கு வராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற மிரட்டலும் விடுக்கப்பட்டு வருவதாக சிலஊழியர் சங்க பிரதிநிதிகள் கூறுகின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த மாநாட்டுக்காக இன்று சிறப்பு விடுமுறையும் அளித்துள்ளது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது. மாநாட்டுக்குஊழியர்களை அழைத்து வர பஸ் வசதி, சென்னையில் தங்கும் வசதி, சாப்பாட்டு வசதி ஆகியவையும் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து ஸ்தம்பித்தது:
மாநாட்டிற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வேன்கள், பேருந்துகள் மூலம் சென்னைக்கு லட்சக்கணக்கானஆசிரியர்கள், ஊழியர்கள் வந்து கொண்டிருப்பதால் சென்னை தாம்பரத்திலிருந்து கோயம்பேடு வரையிலான நெடுஞ்சாலைமுழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசுப் பேருந்துகள் பலவற்றிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இலவசமாகவே சம்பந்தப்பட்ட ஊர்களிலிருந்து அழைத்துவரப்படுவதைப் பார்க்க முடிந்தது. அரசு பேருந்துகளில், அந்தந்த சங்கங்களின் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.
பேருந்துகள் தவிர வேன்கள், கார்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.