“எங்கள் ஆதரவே அவர்களுக்கு போதும்.. வேறு சிந்தனை வேண்டாம்!” விஜயக்கு CPI கறார்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு இடதுசாரிகள் ஆதரவு அளித்திருக்கும் நிலையில், அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் தரப்படுவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், இது குறித்து பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. குறிப்பாக திமுக, அதிமுக கட்சிகளை ஓரம் கட்டி வரலாறு படைத்திருந்தது. இருப்பினும் தனித்து ஆட்சியமைக்க முடியவில்லை. எனவே கங்கிரஸும், இடதுசாரிகளும் ஆதரவு கொடுத்தனர் பின்னர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.

முதல்வராக விஜய்
இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த விவகாரங்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தவெக 108 தொகுதிகளில் ஜெயித்திருந்தாலும், விஜய் இரண்டு தொகுதியில் ஜெயித்ததால், ஒரு தொகுதி கணக்கில் வராது. அதேபோல தவகெவின் திருப்பத்தூர் எம்எல்ஏ வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது.
அதிமுகவில் அதிருப்தி
இப்படியாக தவெக பலம் 106 என இருக்க, காங்கிரஸ் 5, இடதுசாரிகள் 2+2, விசிக 2, ஐயுஎம்எல் 2 என 13 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. இது பெரும்பான்மையை நிரூபிக்க போதுமானது. இருப்பினும், அதிமுகவின் ஒரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவளித்து ஷாக் கொடுத்திருந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி ஆதரவளித்திருந்தனர்.
இடதுசாரிகள் எதிர்ப்பு
இப்படி ஆதரவு கொடுத்தவர்களுக்கு எம்எல்ஏ பதவி வழங்கப்படும் என்று பேச்சுக்கள் அடிபட்டன. இதனை இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், அதிமுகவின் ஒரு பிரிவினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனில், எங்களின் ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வோம் என்று கூறிவிட்டார்.
முடிவு இதுதான்
இந்நிலையில் சிபிஐ (CPI) மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இடதுசாரிகளின் நிலை ஒன்றுதான். சிபிஎம், சிபிஐ, விசிக ஒரே நிலையைதான் எடுத்திருக்கிறோம். மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளித்து, நாங்கள் வெளியிலிருந்து விஜய்க்கு ஆதரவு அளித்தோம். அதேபோல இன்னொரு தேர்தலுக்கான வாய்ப்பை உருவாக்கிவிடக்கூடாது மற்றும் ஆளுநர் அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதால் நாங்கள் இந்த முடிவை எடுத்திருந்தோம்.
மக்கள் நலன்தான் முக்கியம்
எனவே எங்கள் ஆதரவே அவர்களுக்கு போதும். வேறு சிந்தனைகள் தேவையில்லை. இது குறித்து முதல்வர்தான் சிந்திக்க வேண்டும். சிலர் எங்கள் ஆதரவை நிர்பந்தம் என்றும், குடைச்சல் என்றும் கூறுகிறார்கள். ஆனால், மக்கள் நலன்தான் எங்களுக்கு முக்கியம்" என்று கூறியிருக்கிறார்.
எங்கள் ஆதரவே போதும்! வேறு சிந்தனைகள் வேண்டாம் என்று அதிமுகவினரை பற்றிதான் வீரபாண்டியன் பேசியிருக்கிறார். சிபிஐ இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications