கருணாநிதியும், உதிரிப் பூக்களும்: காளிமுத்து
திண்டிவனம்:
திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது நிறைவேற்றமுடியாத திட்டங்களையெல்லாம் பூப் பூவாய் மலரச் செய்திருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் கருணாநிதி போட்ட திட்டங்களெல்லாம் உதிரிப் பூக்களாக உதிர்ந்து நிறைவேறாமலேயே போய் விட்டன என்று அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் நடந்த அதிமுக சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் காளிமுத்து பேசுகையில், யாராலும் வீரப்பனைப் பிடிக்க முடியாது. ஐ.நா. சபையே வந்தால் கூட சிரமம்தான் என்று பேசினார் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா. ஆனால் வீரப்பனை வீழ்த்திக் காட்டினார் ஜெயலலிதா.அண்ணாவால் கொண்டு வரப்பட்ட திட்டம் வீராணம் திட்டம். ஆனால் கருணாநிதி பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டத்தை வைத்து ஏகப்பட்ட ஊழல்களைச் செய்தார். சேத்தியாதோப்பிலிருந்து சென்னை வரை வீராணம் திட்டக் குழாய்கள் காலம் காலமாக துருப்பிடித்துக் கிடந்து வீராணம் திட்டத்தில் கருணாநிதி செய்த ஊழலை உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருந்தது.
ஆனால் மக்கள் தாகம் தீர்க்க கொண்டு வரப்பட்ட அந்தத் திட்டத்தை துரித கதியில் முடித்து சென்னை மக்களின் தாகம் தீர்த்தவர் ஜெயலலிதா. அதுமட்டுமா? லாரிகள் மூலமும் சென்னை நகருக்கு தண்ணீர் கொண்டு வந்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா.
பூசணி கொடியில் இரண்டு விதமான பூக்கள் பூக்கும். ஒரு பூ மலரும், இன்னொரு பூ உதிரும். இதில் மலரும் பூதான் ஜெயலலிதா. உதிரும் பூதான் கருணாநிதி.
அதாவது ஜெயலலிதா கொண்டு வந்த, செயல்படுத்திய திட்டங்கள் அனைத்துமே மக்களுக்கு பயன்பட்டன, சாதனை படைத்தன. ஆனால் கருணாநிதி கொண்டு வந்த, செயல்படுத்திய திட்டங்கள் எல்லாம் உதிரிப் பூக்கள் போல உதிர்ந்து, உபயோகப்படாமல், ஊழலுக்கு மட்டுமே வழி வகுத்தன என்றார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications