பாமக கேட்கும் அந்த 30 தொகுதிகள்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் தங்களுக்கு 30 தொகுதிகளை ஒதுக்குமாறு பாமக கோரியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தொகுதிகளின் பெயர்களை திமுகவிடம் அக் கட்சி வழங்கியுள்ளது.பாமக தனக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 5 தொகுதிகள் வரை விடுதலைச் சிறுத்தைகளுக்கு (மாம்பழச் சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால்!) ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குத் தேவையான தொகுதிகளின் எண்ணிக்கை, போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை 15ம் தேதிக்குள் வழங்குமாறு கருணாநிதி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மட்டுமே கருணாநிதியிடம் வெளிப்படையாக கடிதம் வழங்கியது.
இதனால் மற்ற கட்சிகள் கடிதம் வழங்கவில்லை என்று கருதப்பட்டது. ஆனால், 13ம் தேதியே தனது கடிதத்தைதிமுகவிடம் கொடுத்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கட்சியின் தலைவரான ஜி.கே.மணி, கருணாநிதியைச் சந்தித்து கடிதத்தை கொடுத்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.ஆனால், எத்தனை தொகுதிகள் கோரப்பட்டுள்ளன, அவை எவை என்ற விவரத்தை ராமதாஸ் வெளியிடவில்லை.
பாமக கோரும் தொகுதிகள் விவரம்:
ஆனால், பாமக கோரியுள்ள தொகுதிகள் குறித்து விவரம் வெளியில் கசிந்துள்ளது. அதன் விவரம்:
சைதாப்பேட்டை (சென்னை), செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, திருத்தணி, திருப்பத்தூர், நாட்ராம்பள்ளி, வேலூர், கடலூர், மன்னார்கோவில், மங்களூர் (தனி-இங்கு திருமாவளவன் போட்டியிடக் கூடும்), ரிஷிவந்தியம், ஓசூர், செய்யாறு,
திருவண்ணாமலை, வந்தவாசி, விழுப்புரம், பண்ருட்டி, விருத்தாச்சலம், சிதம்பரம், சங்கராபுரம், பெண்ணாடம், தர்மபுரி, தாரமங்கலம், சேலம்-2, எடப்பாடி, தாராபுரம், அந்தியூர், ஆண்டிமடம்.
மார்க்சிஸ்ட்:
அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரவிருக்கும் 20 தொகுதிகள் விவரம் தெரியவந்துள்ளது. அவை:
வாசுதேவநல்லூர், பத்மநாபபுரம், கம்பம், திருவெறும்பூர், மதுரை கிழக்கு, திருவாரூர், நாகை, குடியாத்தம், மேட்டூர், தொண்டாமுத்தூர், திருச்செங்கோடு, குறிஞ்சிப்பாடி, விளவங்கோடு, சிதம்பரம், திருவட்டார், பெரம்பூர், திண்டுக்கல், சிங்காநில்லூர், பெரம்பலூர், திருப்பூர், தளி.
இந்திய கம்யூனிஸ்ட்:
இந்திய கம்யூனிஸ்ட் இறுதி செய்து வைத்துள்ள 10 தொகுதிகளின் விவரம்:
மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோவில்பட்டி, அம்பாசத்திரம், அரூர், நான்குநேரி, நன்னிலம், மானாமதுரை, திருப்பூர், தளி, பெருந்துரை ஆகியவையும் அடங்கும்.
முன்னதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தந்துள்ள 25 தொகுதிகள் அடங்கிய பட்டியலில் ராணிப்பேட்டை, திருவல்லிக்கேணி, வாணியம்பாடி, கடையநல்லூர், ராமநாதபுரம், கடலாடி ஆகியயுைம் இடம் பெற்றுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகள் சனிக்கிழமை தங்கள் பட்டியலை கருணாநிதியிடம் தருவார்கள் என்று தெரிகிறது.
காங்கிரஸைப் பொறுத்தவரை கட்சியின் புதிய தலைவரான கிருஷ்ணசாமி பதவியேற்று அனைத்து கோஷ்டிகளுடனும் பேச்சு நடத்தி, மத்திய தலைமையிடம் அனுமதி வாங்கி, பின்னர் தான் கருணாநிதியிடம் கடிதத்தைத் தரவுள்ளார்.
வைகோவைப் பொறுத்தவரை 35 இடங்கள் என்ற நிலையில் தீவிரமாக உள்ளார். ஆனால், திமுகவிடம் சுமார் 50 சீட்கள் வரை கேட்டு அவர் கடிதம் தரவுள்ளதாகத் மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மதிமுகவுக்கு அதிகமே 20 சீட் தான் என்ற முடிவில் திமுக உள்ளதால், கடிதத்தைத் தருவதில் இழுபறி நீடிக்கிறது.
இந் நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதல் கூட்டம் இன்று கருணாநிதி தலைமையில் நடந்தது. இக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகள், திமுக போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications