24ம் தேதி ஜெயலலிதா- வைகோ சந்திப்பு?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை வரும் 24ம் தேதி அவரது 58வது பிறந்த நாளன்று சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் வைகோ நீடிப்பாரா, மாட்டாரா என்ற கேள்வி நாளுக்கு நாள் படு சூடாக மாறி வருகிறது.தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் நிலவும் பெரும் கருத்து வேறுபாடு காரணமாக வெட்டு ஒன்று, துண்டு ரெண்டாக முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு வைகோவை, மதிமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் நெருக்கி வருகின்றனர்.
இதனால் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கும் வைகோ தற்போது ஒரு தெளிவான நிலையை நோக்கி நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.
வைகோவுடன் நான் அடிக்கடி பேசுகிறேன். அவர் என்ன பேசினார் என்பதைத் தெரிவித்தால் கருணாநிதி காணாமல் போய் விடுவார் என்று காளிமுத்து பரபரப்பாகத் தெரிவித்தார்.
இதையடுத்து காளிமுத்துவின் பேச்சுக்கு வைகோ விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆற்காடு வீராசாமி அறிக்கை விட்டார். ஆனால் அதற்கு வைகோ பெரிய விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.
ஆமாம், காளிமுத்துவுடன் பேசினேன், ஆனால், அரசியல் பேசவில்லை என்று பதில் அளித்துள்ளார்.
ஆனால் காளிமுத்துவுடன் இந்த சமயத்தில் வைகோ பேச வேண்டிய அவசியம் என்ன, அவர் என்ன பேசியிருப்பார் என்பதை நாடறியம்.
இந் நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை, வைகோ சந்திக்க மறைமுகமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். இதற்கான ஏற்பாடுகளை காளிமுத்து தான் செய்து வந்ததாகவும், இப்போது மருத்துவமனையில் இருந்தாலும் அந்தச் சந்திப்புக்கு காளிமுத்து தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருவதாக பரபரப்பாகக் கூறப்படுகிறது.
வரும் 24ம் தேதி ஜெயலலிதா தனது 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அன்றைய தினம் ஜெயலலிதாவை வைகோ சந்திக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது எந்தளவுக்கு உண்மை என்று கூற முடியவில்லை. அரசியல் வட்டாரத்தில் இன்று பரவிய இந்தச் செய்தியை உளவுப் பிரிவு கிளப்பி விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், காளிமுத்துவுடன் வைகோ அடிக்கடி தொலைபேசியில் பேசுவது, காளிமுத்துவை, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் போய் சந்தித்து நலம் விசாரித்திருப்பது ஆகியவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வைகோ திமுகவை விட்டு விலகத் தொடங்கியிருப்பது புலனாகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் டெல்லி பயணத்தால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், சென்னை திரும்பிய வைகோ கருணாநிதியை சந்திக்கவில்லை.
மதிமுக கோரும் தொகுதிகளின் பட்டியலையும் அவர் கருணாநிதியிடம் அளிக்க முயலவில்லை. மாறாக தனது குடும்பத்துடன் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு புறப்பட்டுச் சென்று விட்டார்.
மொத்தத்தில், வைகோ ஒரு முடிவை எடுத்து விட்டார் என்றே தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications