அதிமுகவுக்கு இளங்கோவன் நன்றி.. நன்றி..
கோவை:
கட்சிக்கு உதவாத திண்டிவனம் ராமமூர்த்தி காங்கிரசில் இருந்து விலகுவதற்கு உதவியாக இருந்த அதிமுகவுக்குநன்றி தெரிவித்துக் கொள்வதாக மத்திய இணையமைச்சர் இளங்கோவன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,திண்டிவனம் ராமமூர்த்தியின் காங்கிரஸ் முதியோர் காங்கிரசாக இருக்கும். அதனால் யாருக்கும் பயனில்லை.கட்சிக்கு எந்த வகையிலும் உதவாமல் இருந்த திண்டிவனம் ராமமூர்த்தி காங்கிரசில் இருந்து விலக உதவி புரிந்தஅதிமுகவுக்கு நன்றி.
நல்ல காரியத்தை யார் செய்தாலும் நாம் பாராட்டியாக வேண்டும். அந்த வகையில் அதிமுகவை பாராட்டுகிறேன்.இப்போது காங்கிரஸ் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணசாமியும் வயதானவர் தான் என்றாலும்,கட்சிக்காக 50 வருடம் கடுமையாக உழைத்தவர்.
கட்சியை விட்டு எக்காரணம் கொண்டும் விலகாதவர். அவர் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவார். அவருக்கு முழுஆதரவு கொடுப்போம்.
அதிமுகவில் உள்ள பொன்னையன், முத்துசாமி போன்றவர்கள் அதிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேரவேண்டும்.
தற்போதுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு (பெரும்பாலனவர்கள் முன்னாள் தாமகவினர்) மீண்டும் சீட்கிடைக்காது என்று சொல்லப்படுகிறது. அதை வரவேற்கிறேன். எஸ்.ஆர்.பாலப்பிரமணியத்துக்கும் மீண்டும் சீட்கிடைக்காது. அவர் தான் கவர்னர் ஆகப் போகிறாரே. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும்.
2,3 முறை எம்எல்ஏவாக இருந்தவர்கள் தொகுதியையும் மக்களையும் கட்சியையும் கண்டுகொள்ளாவிட்டால் சீட்கொடுக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு 10 எம்பிக்கள் உள்ளனர். அந்த வகையில் திமுக கூட்டணியில் எங்களுக்கு சீட் ஒதுக்கவேண்டும் (அதாவது 60 சீட்) என்றார் இளங்கோவன்.