சத்யபாமா பல்கலை மாணவர் தற்கொலை!
சென்னை:
தான் படித்த கல்லூரியில் பொறியியல் படிப்புக்கு அங்கீகாரம் ரத்தான கவலை, போராட்டதில் ஈடுபட்டதால் பெற்றோர் திட்டுவார்களோ என்ற பயம், போலீஸார் சித்திரவதை செய்யக் கூடுமே என்ற பீதியில், சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
நாடு முழுவதும் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடத்தும் பொறியியல் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் திடீரென ரத்து செய்துள்ளது. இதனால் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்கள் சரியான விளக்கம் அளிக்காததால் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனால் சத்யபாமா, எஸ்.ஆர்.எம்., காஞ்சி மடத்துக்கு சொந்தமான சங்கரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகியவை வன்முறையை சந்தித்து காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
இந் நிலையில் சென்னை சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துள்ளது பெரும் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ராபின் வாஸ் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தார். சூளைமேட்டில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்தார்.
பொறியியல் படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் போராட்டத்தில் குதித்து அது வன்முறையில் முடிந்தது. இதனால் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
இந் நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது படுக்கை அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ராபின் வாஸ் இறந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஸ்டிரைக் செய்து போராட்டத்தில் குதித்ததால் தனது பெற்றோர் திட்டுவார்களே என்று தனது உறவினர்களிடம் ராபின் புலம்பியுள்ளார்.
அத்தோடு வன்முறை தொடர்பாக போலீஸார் வந்து விசாரணை நடத்தினால் மிகவும் கேவலமாகப் போய் விடுமே என்றும் அவர் வருந்தியுள்ளார். படிப்பு போய் விட்டதே என்ற கவலையும் அவருக்கு இருந்துள்ளது.
இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், கல்லூரித் தரப்பிலிருந்து அவருக்கு ஏதாவது நெருக்கடி வந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.