தேர்தலில் குதிக்கும் ஐஐடி மாணவர்கள்!
சென்னை:
ஐஐடி மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பரீத்ரனா என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர். வருகிற சட்டசபைத் தேர்தலில் தாங்கள் போட்டியிடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஏகப்பட்ட புதுக் கட்சிகள் பிறந்துள்ளன. இன்னும் பல கட்சிகள் வரப் போகின்றன. வழக்கமான அரசியல்வாதிகளின், வழக்கமான கட்சிகளுக்கு மத்தியில் புதிதாகப் பிறந்துள்ளது பரீத்ரனா என்ற வித்தியாசமான பெயருடன் கூடிய கட்சி.இந்தக் கட்சியின் பெயரில் மட்டும் வித்தியாசம் இல்லை, மாறாக கட்சியின் நிர்வாகிகளும் ரொம்பவே வித்தியாசமானவர்கள்தான்.
ஐ.ஐ.டியில் படித்து பட்டம் பெற்ற பட்டதாரி இளைஞர்கள்தான் இந்த கட்சியைத் தொடங்கியுள்ளவர்கள்.
பரீத்ரனா கட்சியின் தலைவரான தன்மய் ராஜ் புரோஹித் தங்களது கட்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நான் மும்பை ஐ.ஐ.டியில் பி.டெக் படித்துள்ளேன். நானும் என்னைப் போன்றே ஐ.ஐ.டியில் படித்த சில முன்னாள் மாணவர்களும் சேர்ந்து இந்தக் கட்சியைத் தொடங்கியுள்ளோம்.
இந்திய அரசியல் இன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது. படித்தவர்களும், நல்ல பதவியில் இருப்பவர்களும், கெளரவம் பார்த்துப் பார்த்தே அரசியலைக் கெடுத்து விட்டார்கள்.
அவர்கள்தான் முக்கியமாக அரசிலுக்கு வர வேண்டும். இங்கு லஞ்சம், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. அதை ஒழிக்க துணிச்சலான, படித்த இளைஞர்கள்தான் தேவை. நமது சமூகத்தின் முகத்தை மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மக்களிடையே பொறுப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. நடப்பது நடக்கட்டும் என்ற அலட்சிய மனோபாவத்துடன் அவர்கள் உள்ளனர். வாக்களிக்கும் உரிமையை யாரும் சரியாகப் பயன்படுத்துவதில்லை.
நான் கூட இதுவரை நடந்த தேர்தல்களில் வாக்களித்ததில்லை. மும்பையிலும், தொடர்ந்து அமெரிக்காவிலும் இருந்ததால் இந்த நிலை. முதலில் இந்த விழிப்புணர்வு நமக்கு வர வேண்டும்.
அரசியல் ரீதியாக எதையும் சாதிக்கலாம். அதற்குத் தேவை தூய்மையான மனதும், துணிச்சலான முடிவுகளும்தான்.
இந்த நோக்கத்தில்தான் நாங்கள் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளோம். தேசிய அளவில் பெரிய சக்தியாக மாறுவதே எங்களது லட்சியம்.
மத்திய அரசின் எந்தக் கொள்கையும் தெளிவாக இல்லை. குறிப்பாக வெளிநாட்டுக் கொள்கையில் பெரும் குழப்பம் நிலவுகிறது. நீண்ட கால நண்பராக திகழ்ந்த ரஷ்யாவை தற்போது கைவிட்டு விட்டு, அமெரிக்காவுடன் கை குலுக்கி வருகிறோம்.
தமிழக அளவில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் எங்களது இயக்கம் இயங்கும். அதற்கேற்ற வகையில், கொள்கைகளை வகுப்போம். தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடப் போகிறோம்.
வெற்றி பெறுவது என்ற லட்சியத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை. மக்களிடையே எங்களுக்கு ஒரு அறிமுகம் ஏற்பட வேண்டும், மக்களிடையே விழிப்புணர்வு வர வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம்.
சென்னையில் எங்களது கட்சியின் கூட்டம் நடக்கிறது. அப்போது தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் மனு கொடுக்கலாம்.
கண்டிப்பாக பட்டதாரிகள்தான் மனு கொடுக்க வேண்டும். தகுதி உடையவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றார் ராஜ் புரோஹித்.












Click it and Unblock the Notifications