அதை நாங்க மறந்தாச்சு: ஜெ-வைகோ!
சென்னை:
கடந்த காலங்களில் நடந்ததை (பொடாவில் வைகோவை உள்ளே போட்டது) மறந்து விட்டோம், சட்டசபைத் தேர்தலில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்று முதல்வர் ஜெயலலிதாவும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதாவும் வைகோவும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.ஜெயலலிதா பேசுகையில், அரசியலில் நிரந்தர எதிரிகள் யாரும் இல்லை. கடந்த காலத்தில் நடந்ததை இருவரும் மறந்து விட்டோம். வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன், மதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போகிறது.
கடந்த காலத்தில் நடந்தது குறித்து நாங்கள் இப்போது நினைத்துப் பார்க்கவில்லை. எதிர்காலத்தை மட்டுமே நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். மதிமுவுக்கும், அதிமுகவுக்கும் மிகப் பெரிய எதிர்காலம் காத்துள்ளது.
இக்கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் வாய்ப்பு இருக்கிறது. வருவார்கள், அப்போது நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்றார் ஜெயலலிதா.
வைகோ பேசுகையில், தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு அற்புதமான நிகழ்வு. இந்தக் கூட்டணி மகா பலம் பொருந்தியது. வலுவான, உறுதியான கூட்டணியாக இது அமையும். தமிழக மக்களிடையே இந்தக் கூட்டணி மிகப் பெரிய வரவேற்பைப் பெறும்.
அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக மதிமுக தொண்டர்கள் முழு மனதுடன், முழு வேகத்துடன், சிறப்பாக செயல்படுவார்கள் . அதேபோல, மதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக அதிமுக தொண்டர்கள் முழு வேகத்துடன் செயல்பட்டு வெற்றியைத் தேடித் தருவார்கள்.
அரசியலில் நிரந்தர எதிரி கிடையாது என்ற ஜெயலிலதாவின் கருத்தை ஏற்கிறேன். இரு கட்சிகளும் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை மறந்து விட்டு, எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பீடு நடை போடும்.
அதிமுக பரிபூரணமான, தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியில் அமரும் என்றார் வைகோ.
உங்களால் பொடாவில் உள்ளே போடப்பட்டவரோடு மேடையில் ஒன்றாக உட்காருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று ஜெயலலிதாவிடம் கேட்டபோது, நாங்கள் நண்பர்களாக சேர்வது மிகச் சிறந்த உணர்வைத் தருகிறது.