திருச்சி மாநாடு திருப்பம் தரும்: ஸ்டாலின்
திருச்சி:
திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாடு, தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறினார்.
திருச்சியில் 9வது திமுக மாநில மாநாடு மற்றும் இளைஞர் அணி வெள்ளி விழா மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாலை 3 மணிக்கு அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி மாலை அணிவித்தார்.பின்னர் அலங்கார ரதத்தில் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமருகன் ஆகியோர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
சிந்தாமணியிலிருந்து மாநாட்டுத் திடல் வரை இந்த ஊர்வலம் நடந்தது. அதன் பின்னர் திடலின் முன்புறம் 82 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியை கருணாநிதி ஏற்றி வைத்தார்.
இதன் பின்னர் நாஞ்சிலார் சுயமரியாதை சுடர் மாடத்தை திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி திறந்து வைத்தார். பின்னர் மாநாட்டை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து இளைஞர் அணி வெள்ளி விழா மாநாடு தொடங்கியது. இதில் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்டாலின் பேச்சில் அனல் பறந்தது.
அவர் பேசுகையில், 1996ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக இதே திருச்சியில் 7வது மாநில மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில், தொடர்ந்து நீதிமன்றங்களின் கண்டனத்துக்கு ஆளாகி வரும் ஜெயலலிதாவை பதவியிலிருந்து தூக்கி எறிவோம்;
மக்கள் விரோத அதிமுக அரசை பதவியிலிருந்து அகற்றி, தமிழகத்தை காக்க மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என்று கூறியிருந்தோம்.
அந்த இரண்டு தீர்மானங்களும் இன்றைக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளன. 10 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜெயலலிதா மாறவில்லை, அவரது அராஜக ஆட்சியை ஒழிக்க வேண்டிய நிலையில் மக்களும், நாமும் உள்ளோம்.
இன்றும் பல்வேறு பிரச்சினைகளில், நீதிமன்றங்கள் ஜெயலலிதாவைக் கண்டித்துக் கொண்டுதான் உள்ளன.
1996ல் நடந்த மாநில மாநாட்டுக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் அதிமுக வீழ்ந்தது, திமுக வென்றது.
அதே போன்ற ஒரு திருப்பத்தைக் கொடுக்கப் போகிறது இந்த மாநில மாநாடும். வரலாறு மீண்டும் திரும்பும், புதிய வரலாறு படைக்கும்.
திருச்சியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டின்போது, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டது. இன்று வரை அந்தக் கனவு நனவாகவில்லை.
திமுக இளைஞர் அணியின் பணிகள் ஏராளம். கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்வது, போராட்டங்கள் நடத்துவது, ஊர்வலங்கள் நடத்துவது, உண்ணாவிரதங்கள் மேற்கொள்வது என அயராத பணியில் ஈடுபட்டிருப்பது இளைஞர் அணியினர்தான்.
நீங்கள் பதவிகளைத் தேடி ஓடாதீர்கள். உங்களது சேவையைப் பார்த்து பதவியே தேடி வரும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. பாசறைகளில் தயாராக இருங்கள். எந்த நேரமும் உங்களுக்கு போர்க்களத்தில் இறங்கும் வாய்ப்பு வரலாம் என்றார் ஸ்டாலின்.
வீரமணி பேச்சு:
முன்னதாக கி.வீரமணி பேசுகையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வருகிற தேர்தலில் பெறப் போகும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அரசியல் மாற்றத்திற்காக மட்டும் இந்த மாநாட்டை திமுக நடத்தவில்லை. சமூக மாற்றத்தையும் இந்த மாநாடு ஏற்படுத்தப் போகிறது.
திமுக இளைஞர் அணிக்குத் தலைமை தாங்கி வெற்றிக் களம் காண நல்ல தலைவர் (ஸ்டாலின்) கிடைத்துள்ளார். அவர் மூலம் திமுகவும் பல்வேறு வெற்றிகளை எதிர்காலத்தில் பெறும் என்றார் வீரமணி.