அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை:சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பான சட்ட மசோதாசட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி நேற்று சம்பளங்கள் வழங்கல் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல்செய்து பேசினார். அப்போது, அரசு சபாநாயகருக்கும், அமைச்சர்களுக்கும், துணை சபாநாயகருக்கும்,எதிர்க்கட்சித் தலைவர், அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு வழங்கப்படும் ஈட்டுப் படியினை மாதம் ரூ. 6ஆயிரத்திலிருந்து ரூ. 8 ஆயிரமாக உயர்த்தவும், தொகுதிப் படியினை ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 4 ஆயிரமாகவும்உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல எம்.எல்.ஏக்களுக்கு ஈட்டுப் படியினை ரூ. 4 ஆயிரத்திலிருந்து ரூ. 6 ஆயிரமாகவும், தொகுதிப்படியினை ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 4 ஆயிரமாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
1.9.2006 முதல் இந்த உயர்வு அமலாக்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 12 லட்சத்து80 ஆயிரம் கூடுதல் செலவாகும் என்றார்.
இந்த சட்ட மசோதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் நன்மாறன் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர்குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.