நாளை மறுதினம் எஸ்எஸ்எல்சி தேர்வு ஆரம்பம்
சென்னை:தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் வரும் வியாழக்கிழமை (22ம் தேதி) தொடங்குகின்றன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7.76 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வெழுத உள்ளனர். இதில் 3.89 லட்சம் பேர் மாணவர்கள், 3.86 லட்சம் பேர் மாணவிகள் ஆவர்.
கடந்த ஆண்டை விட 37,161 மாணவ, மாணவிகள் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2,634 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதே போல மெட்ரிக்குலேஷன் தேர்வு நாளை துவங்குகிறது. இந்தத் தேர்வை 1,01,523 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
ஒரு சில மையங்கள் தவிர அனைத்து மையங்களிலும் எஸ்எஸ்எல்சி,மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓஎஸ்எல்சி மாணவர்கள் கலந்து உட்கார்ந்து தேர்வு எழுதவுள்ளனர். காப்பி அடிப்பதை தவிர்க்க இந்த யுக்தி கையாளப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட தேர்வு மையங்களில் சென்று முறைகேடுகள், ஒழுங்கீனங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பர்.
மேலும் தேர்வு மையங்களை பார்வையிட பறக்கும் படைகளையும் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் அமைத்துள்ளனர்.
தேர்வு மையத்தில் காப்பி அடிக்க ஊக்குவிக்கும் பள்ளி நிர்வாகங்களின் தேர்வு மையங்கள் ரத்து செய்வதோடு பள்ளியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications