ஜல்லிக்கட்டு நடத்த போலீஸ் தடைகொந்தளித்த மக்கள்-கல்வீச்சு-மோதல்
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் கீரணூர் அருகே ஜல்லிக்கட்டு நடத்த போலீஸார் தடை விதித்ததால், கோபமடைந்த கிராம மக்கள் போலீஸாருடன் மோதலில் குதித்தனர். சரமாரியாக கற்களை வீசி போலீஸாரைத் தாக்கினர். போலீஸ் ஜீப்பும் அடித்து நொறுக்கப்பட்டது.
தமிழத்தில், ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்தலாம், மற்ற மாதங்ளில் நடத்தக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யபபட்டது. ஆண்டுதோறும் இங்கு ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம்.
ஆனால் தற்போது உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளதால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த போலீஸார் அனுமதிக்கவில்லை. ஆனால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என கிராம மக்கள் கூறியிருந்தனர்.
இதனால் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். யாரும் ஜல்லிக்கட்டுக் காளைகளை ஊருக்குள் கொண்டு வந்து விடாமல் தடுக்க நார்த்தாமலை கிராமத்தைச் சுற்றிலும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில், தம்பம்பட்டி கிராமத்திலிருந்து 5 லாரிகள் நிறைய ஜல்லிக் கட்டுக் காளைகளை மக்கள் கொண்டு வந்தனர். இவற்றை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதேபோல பல்வேறு கிராமங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மாடுகளையும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் பகுதியில் திரளான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கோவில் மாடு அங்கு கொண்டு வரப்பட்டது. அதையும் போலீஸார் தடுத்தனர். அதற்கு ஊர் மக்கள் இது கோவில் மாடு, சாமி கும்பிட்டு விட்டு அனுப்பி விடுவோம் என்றனர். இதையடுத்து அதை மட்டும் போலீஸார் அனுமதித்தனர்.
ஆனால் பல்வேறு குறுக்கு வழியாக காளை மாடுகளை சிலர் கொண்டு வந்தனர். மேலும் கோவில் மாட்டை வைத்து சாமி கும்பிட்ட பின்னர் ரகசியமாக கொண்டு வரப்பட்ட மாடுகளை அப்படியே அவிழ்த்து விட்டனர்.
இதனால் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதை போலீஸார் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மீது ஊர் மக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீஸ் ஜீப்புகளையும் உருட்டி விட்டு அதை அடித்து நொறுக்கினர்.
பொதுமக்களின் இந்தத் திடீர் தாக்குதலால் போலீஸார் நிலைகுலைந்தனர். கல்வீச்சில் 9 போலீஸார் காயமடைந்தனர். 5 ஜீப்புகள் சேதமடைந்தன.
சுமார் ஒரு மணி நேரம் அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது.
தாக்குதல் சம்பவம் குறித்ததும், மாவட்ட எஸ்.பி. கபில்சரோட்கர், உதவி ஆட்சித் தலைவர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர். தாக்குதல் தொடர்பாக 20 பேர் மீது வழக்கு தெடாரபபட்டுள்ளது. அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நார்த்தாமலை கிராமத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications