மூடு மந்திரம் ஏன்-கருணாநிதிக்கு வைகோ கேள்வி
சென்னை:காவிரி பிரச்சனையில் தமிழக அரசின் அணுகுமுறையில் சிறிதளவும் பொது நல நோக்கம் இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியிள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
காவிரி பிரச்சனை குறித்து தமிழக அரசு இன்று கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அனுப்பிய கடிதத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையொட்டி விளக்கம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக நடுவர் மன்றத்திடம் மறு ஆய்வு செய்ய வேண்டிய அம்சங்கள் குறித்த வரைவை தமிழக அரசு தயார் செய்துள்ளது.
இந்த வரைவின் மீது கூட்டத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 10ம் தேதிக்கு முன்பே இப்பிரச்சனைக்கான வரைவை தமிழக அரசு தயார் செய்து விட்டதாக கருணாநிதி கூறியுள்ளதால், அதை அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியிருக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் அந்த வரைவு குறித்தும், அதன் சாதக, பாதகங்கள் குறித்து உரிய ஆலோசனைகளை கூட்டத்தில் தெரிவிக்க உரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
வரைவை அரசியல் கட்சிகளுக்கு அனுப்பாமல் மூடுமந்திரமாக வைத்துக் கொண்டு இருப்பது மிகத்தவறான அணுகுமுறை. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் எழுதியுள்ள கடிதத்தில் கருணாநிதி தெரிவித்த வரைவு குறித்த உண்மையை மறைத்திருக்கிறார்.
காவிரி பிரச்சனையில் தமிழக அரசின் அணுகுமுறை சிறிதளவு கூட பொது நல நோக்கமில்லை என வைகோ கூறியுள்ளார்.