அண்ணா பல்கலை., ஐஐடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தின் எதிரொலியாக இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் பல்வேறு முக்கிய உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி, மத்திய தோல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் உள்ளிட்ட பல கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள் உள்ளன.
இவை அனைத்தும் சர்தார் படேல் சாலையில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐஐடியின் டீன் இடி சாண்டி கூறுகையில், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என்றாலும் கல்லூரியில் போலீஸாரை குவித்து கல்லூரி சூழலை கெடுக்கக் கூடாது. நவீன முறைகளை கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறுகையில்,
உயர்கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு பலப்படுத்துவது முக்கியம். எங்கள் பல்கலைக்கழகத்தில் அந்நியர்கள் நடமாட்டத்தை தடுக்க ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வந்துள்ளோம். இந்த அட்டையை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கியுள்ளோம் என்றார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் கூறுகையில், உயர்கல்வி நிறுவனங்களைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுல்ளது. ரோந்துப் பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த பகுதிகளில் உள்ள இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டின்போது நடந்த தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு சென்னையில் உயர்கல்வி நிறுவனங்களில் மாநாடுகள், கருத்தரங்குகள் நடக்கும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது என்றார் லத்திகா.












Click it and Unblock the Notifications