லோகநாதன் உடல் தகனம் செய்யப்பட்டது
பிளாக்ஸ்பர்க்:விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் தென் கொரிய மாணவனின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழக பேராசிரியர் லோகநாதனின் உடல் இன்று காலை இந்து முறைப்படி விர்ஜீனனியா டெக் பல்கலைக்கழகம் அருகே தகனம் செய்யப்பட்டது.
அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்தில் தென் கொரிய மாணவர் சோ சியூங் ஹூ நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பேராசிரியர் லோகநாதன், மாணவி மினால் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர்.லோகநாதனின் விருப்பப்படி அவரது உடல் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்திலேயே தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்தனர்.
இதையடுத்து லோகநாதனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் 9 பேர் அமெரிக்காவுக்கு விரைந்தனர். அவர்களின் பயணச் செலவுகளை தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.
வாஷிங்டன் சென்ற அவர்கள் தனி விமானம் மூலம் பிளாக்ஸ்பெர்க் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்திற்குச் சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை இந்திய நேரப்படி 9 மணிக்கு லோகநாதனின் உடல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது. முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் இந்தியத் தூதர் சென் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுப்பிய இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது. பின்னர் இந்து முறைப்படி லோகநாதனின் உடல் அருகில் உள்ள மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications