சென்னை துறைமுகத்திற்கு பலத்த பாதுகாப்பு
சென்னை: லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தலாம் என மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால், சென்னை துறைமுகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கியத் துறைமுகம் ஒன்றை லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் தாக்கி அழிக்கத் திட்டமிட்டுள்ளாகவும், இதற்காக கராச்சியில் பயிற்சி பெற்ற தற்கொலைப்படை ஒன்று ஊடுறுவியுள்ளதாகவும் மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இதையடுத்து சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்துக்கு வெளியே போலீஸார் 25 மோட்டார் சைக்கிள்கள், ஜீப், சைக்கிள்களில் ரோந்துப் பணியை மேற்கொள்வர். 24 மணி நேரமும் இந்த பாதுகாப்பு மேற்கொள்ளப்படும்.
துறைமுகத்துக்கு உள்ளே மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் 50 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். துறைமுகத்தின் முக்கியப் பகுதிகளில் இவர்கள் ரோந்து செல்வர்.
துறைமுகத்தின் அனைவத்து வாயில்களிலும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
கடலோரக் காவல் படை, மிதக்கும் காவல் படையும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.