சிறையில் ஸ்ரீதர் வாண்டையார் உண்ணாவிரதம்: கருணாநிதி கொடும்பாவி எரிப்பு-10 பேர் கைது:கருணாநிதி கொடும்பாவி எரிப்பு-10 பேர் கைது
திருச்சி:அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றததற்காகவும், வாகனத்தில் ஆயுதங்களுடன் சென்றதற்காகவும் கைது செய்யப்பட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் திருச்சி சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
சீர்காழிக்கு வந்திருந்த அமைச்சர் ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றபோது மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 16 பேரை விசாரணைக்காக போலீஸார் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து அறிந்ததும் வாண்டையார் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டுச் சென்றார். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்ற வாண்டையாரின் வாகனத்தை சோதனையிட்ட போலீஸார் ஆயுதங்கள் வைத்திருந்ததாக கூறி அவரைக் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் 28 பேரும் கைது செய்யப்பட்டனர். அனைவரும் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். பார்வையாளர்களை சந்திக்கவும் அவர்கள் மறுத்து வருகின்றனர்.
இதையடுத்து வாண்டையாரிடம் பேசி உண்ணாவிரதத்தை கைவிடும்படி சிறை அதிகாரிகள் கோரி வருகின்றனர். அவரது உடல் நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வாண்டையாரின் கைதை கண்டித்து இன்று சிதம்பரம் பஸ் நிலையத்தில் சாலை மறியல் பேராட்டம் நடத்திய அவரது கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
சுமார் 450 பேர் கொண்ட அக் கும்பல் சாலையில் பாறைகளைப் போட்டு பஸ்களை தடுத்தது. இதையடுத்து அவர்களை போலீசார் ஓட ஓட விரட்டி அடித்தனர். 50 பேரையும் கைது செய்தனர்.
கருணாநிதி கொடும்பாவி எரிப்பு:
இதற்கிடையே மதுரையில் முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோரிப்பாளையத்தில் கருணாநிதியின் உருவ பொம்மையை அவர்கள் எரித்தனர். இது தொடர்பாக 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications