பெரியார் இன்று ரிலீஸ்-பிஆர்ஓ கருணாநிதி!
சென்னை:பெரியார் படத்தை வெற்றிப் படமாக்க திமுகவினர் அனைவரும் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்குச் சென்று படத்தைப் பார்த்து அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பெரியார் திரைப்படம் இன்று தமிழகமெங்கும் ரிலீஸாகிறது.இதையொட்டி முரசொலியில் முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழ் இனத்தின் முரெசாலியாக திகழும் இனமுரசு சத்யராஜ், தந்தை பெரியார் வேவடத்தில் நடித்துள்ள பெரியார் படத்தை உங்களது ஊர்களில் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு குடும்பத்தோடு சென்று பார்த்து பெரியாருக்கு மரியாதை செலுத்துங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் கருணாநிதி.
பெரியார் படத்தின் விநியோக உரிமையை திமுகவினரே பெரும்பாலும் எடுத்துள்ளனராம். சென்னை நகர உரிமையை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும்,
திருச்சி உரிமையை அமைச்சர் கே.என்.நேருவும், கோவை உரிமையை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் தங்களது உறவினர்கள் மூலமாக வாங்கியுள்ளனராம்.
மற்ற மாவட்டங்களிலும் கூட திமுகவினரே விநியோக உரிமையை வாங்கியுள்ளனராம். இதற்காக அவர்கள் பெரும் தொகையை தந்துள்ளதாகவும் தெரிகிறது.
இப்படத்தைத் தயாரிக்க தமிழக அரசு ரூ. 90 லட்சம் மானிய உதவியை அளித்தது நினைவிருக்கலாம்.
பல்வேறு சர்ச்சைகள், பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று திரைக்கு வருகிறார் பெரியார்.