சரத்குமார் ரசிகர்கள் மீது பயங்கர தாக்குதல்
திருநெல்வேலி:விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சென்று கொண்டிருந்த நடிகர் சரத்குமார் ரசிகர்களை தாக்கிய 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விருதுநகரில் நடைபெற்ற காமராஜர் மணிமண்டப அடிக்கல் நாட்டுவிழாவிற்கு வருவதற்காக 50க்கும் மேற்பட்ட வேன்களில் சங்கரன்கோவில் வழியாக வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சங்கரன் கோவில் அருகே வந்தபோது ஒரு கும்பல் வழி மறித்து சில வாகனங்கள் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தியது.
அந்த கும்பல் அரிவாளால் வெட்டியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் நடிகர் சரத்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இது குறித்து போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. தூத்துகுடி மாவட்ட கண்காணிப்பாளரும், நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் பொறுப்பை கவனித்து வரும் ஜான் நிக்கல்சனும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டனர்.
இதன் பேரில் சங்கரன்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, களப்பாகுளத்தை சேர்ந்த 25 பேரை போலீஸார் தேடி வந்தனர்.
அவர்களில் கோட்டூர் துரை(27), சுந்தரராஜன்(27), சந்தனபாண்டி(37), சந்தான பாண்டியன்(27) சந்தன பாண்டி(40), வேல்சாமி(49), மருதையா(60) ஆகிய 7 பேரை கொலை முயற்சி மற்றும் பொதுசொத்துக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய வழக்குகளில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.