அம்பத்தூரில் அவசரமாக லேண்ட் ஆன ஹெலிகாப்டர்
சென்னை:இந்திய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறு காரணமாக அம்பத்தூரில் தரையிறக்கப்பட்டது.
இந்த ஹெலிகாப்டர் நேற்று காலை பயிற்சிக்காக சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. அதில் கமாண்டர்கள் விகாஸ், சஞ்சய் பரத், விமானிகள் லால், குமார் ஆகியோர் இருந்தனர்.
மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. அப்போது ஹெலிகாப்டர் அம்பத்தூருக்கு மேலே பறந்து கொண்டிருந்தது.
இதையடுத்து அங்குள்ள டன்லப் நிறுவனம் அருகே உள்ள காலி மைதானத்தில் ஹெலிகாப்டரை விமானிகள் தரை இறக்கினர்.
திடீரென ஹெலிகாப்டர் வந்து இறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் கூட்டம் கூடி விட்டது. போலீஸாருக்குத் தகவல் தெரிந்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர்.
பின்னர் கடலோரக் காவல் படையின் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தரப்பட்டு பொறியாளர் குழு விரைந்து வந்து ஹெலிகாப்டரை பழுது பார்த்தனர். பின்னர் 3 மணியளவில் ஹெலிகாப்டர் பழுது சரி செய்யப்பட்டு பறந்து சென்றது.