பெரியாறு மதகுகளை மூடக் கோரி போராட்டம்
மதுரை:முல்லைப் பெரியாறு அணையின் மதகுகளை உடனடியாக மூடக் கோரி பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மே மாத இறுதியில், பருவ மழைத் தொடங்கும். இந்தக் காலத்திலாவது முல்லைப் பெரியாறு அணையின் மதகுகளை இறக்கி, தண்ணீரைத் தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஜூன் மாதம் பெய்த கன மழையின்போது 142 அடி நீரைத் தேக்கி வைத்திருக்க நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் அதைச் செய்ய தமிழக அரசு தவறி விட்டது.
இதனால் உச்சநீதிமன்றம் நமக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தும் கூட நாம் அதை பயன்படுத்தத் தவறி விட்டோம். எனவே இந்த ஆண்டாவது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி அளவுக்கு தண்ணீரைத் தேக்கி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி மே 9ம் தேதி மதுரை, பரமக்குடி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகளுடன் இணைந்து பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார் நெடுமாறன்.