கருணாநிதிக்கு அரசு விழா-விஜயகாந்த் கண்டனம்
கடலூர்:சட்டசபையில் 50 ஆண்டு காலத்தை நிறைவு செய்ததற்காக முதல்வர் கருணாநிதிக்கு அரசு சார்பில் பொன் விழா நடத்தப்படுவது தேவையற்றது, கண்டனத்துக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தனது தொகுதியான விருத்தாச்சலத்திற்கு இன்று விஜயகாந்த் வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஒரு கட்சியின் தலைவராக இருக்கிற கருணாநிதி, அந்தக் கட்சியின் சார்பில் சட்டசபையில் 50 ஆண்டுகளை உறுப்பினராக நிறைவு செய்துள்ளார். இதை அரசு சார்பில் விழாவாக எடுப்பது தவறானது, கண்டனத்துக்குரியது.
1949ம் ஆண்டு திமுக உருவாக்கப்பட்டபோது கருணாநிதி அதில் உறுப்பினராகக் கூட இல்லை. ஆனால் திமுக உருவானபோது கருணாநிதி அதில் உறுப்பினராக இருந்தார் என்று பெரியார் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆரம்பித்தபோது கருணாநிதி அக்கட்சியில் இல்லை என்பதை நான் நிரூபிக்கத் தயார். அதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. எனவே கருணாநிதி திமுக ஆரம்பிக்கப்பட்டது முதல் அதில் இருந்தார் என்று பெரியார் படத்தில் கூறியிருப்பது அப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரின் தவறு.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தமிழக மக்களைப் பாதிக்கும் விஷயங்களில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட எம்.பிக்கள் பெரும் துரோகம் செய்துள்ளனர். தமிழக மக்களுக்காக அவர்கள் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை.
எனது தொகுதியான விருத்தாச்சலத்தில் 2006-07ம் ஆண்டில் 42 பணிகளுக்கு ரூ.1.20 கோடி நிதியை ஒதுக்க ஏற்பாடு செய்துள்ளேன். அதில் 12 பணிகள் முடிவடைந்துள்ளன. மற்ற பணிகள் ஏன் நிலுவையில் உள்ளன என்று அதிகாரிகளைக் கேட்டபோது அவர்களிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications