பாலாறு: ஆந்திராவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாமக வழக்கு
டெல்லி:பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து பாமக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாலாற்று நீரைப் பயன்படுத்த கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்ளுக்கும் உரிமை உள்ளது.
1892ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி எந்தவொரு மாநிலமும் ஆற்றின் குறுக்கே அணை கட்டக் கூடாது. அப்படிக் கட்டுவதாக இருந்தால் மற்ற மாநிலங்களின் ஒப்புதலோடுதான் கட்ட வேண்டும்.
ஆனால் அதை மீறி ஆந்திர அரசு குப்பம் அருகே கணேசபுரம் என்ற இடத்தில் அணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த அணையை கட்டினால் தமிழகத்தின் வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு பெரும் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படும். விவசாயம் பாதிக்கப்படும்.
எனவே இந்த மனு மீது தீர்ப்பு அளிக்கப்படும் வரை பாலாற்றின் குறுக்கே எந்த இடத்திலும் ஆந்திர அரசு அணை கட்டக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என பாமகவின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு மீதும் பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் மீதும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர அரசின் திட்டத்தைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வந்தார்.
இந் நிலையில் அவரே வழக்கு தாக்கல் செய்துள்ளார்.