தயாநிதி மாறனை கட்சியிலிருந்து நீக்கவும் முடிவு
சென்னை: தயாநிதி மாறனை திமுகவில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் நிர்வாக குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நேற்று சென்னையில் திமுக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதலாவது தீர்மானமாக, மத்திய அமைச்சரவையில் திமுக சார்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சரான தயாநிதி மாறனின் அணுகு முறைகளும், செயல்பாடுகளும் திமுகவின் கட்டுபாட்டை சீர்குலைக்கும் வண்ணம் இருந்து வருவதாலும்,
கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாலும அவரை மத்திய அமைச்சரவைலிருந்து விலக்கி கொள்ள தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கழக தலைவர் கலைஞர் கருணாநிதியும், பொதுசெயலாளர் அன்பழகனையும் கேட்டுகொள்வது என நிர்வாக குழு தீர்மானிக்கிறது.
இரண்டாவது தீர்மானம், தயாநிதி மாறனின் அணுகுமுறைகளும், செயல்பாடுகளும் கழகத்தின் கட்டுபாட்டை குலைக்கும் வண்ணம் இருந்து வரும் காரணத்தால் கழகத்தில் அவர் வகிக்கும் உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பு குறித்து அவரது விளக்கத்தை பெற்ற பின் மேல் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என நிர்வாக குழு தீர்மானிக்கிறது என 2 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து உங்களை ஏன் கட்சியை விட்டு நீக்கக் கூடாது என்று கேட்டு தயாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது.