வைகுண்டராஜன் நிறுவனத்தில் திடீர் ரெய்டு
திருநெல்வேலி:ஜெயா டிவியின் முக்கியப் பங்குதாரராக கூறப்படும் தொழிலதிபர் வைகுண்டராஜனின் இருப்பிடங்களில் கனிம வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் வைகுண்டராஜன். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் உள்ள தாது மணலை எடுத்து வெளிநாடுளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
ஜெயா டிவியின் முக்கிய பங்குதாரராகவும் இவர் உள்ளார். இதன் காரணமாக வைகுண்டராஜனை பழிவாங்கும் நோக்கிலும், அவரிடம் உள்ள ஜெயா டிவியின் பங்குகளை பறித்து ஜெயா டிவியை முடக்கும் நோக்கிலும் வைகுண்டராஜன் மீது குண்டர் சட்டம், ரெய்டு உள்ளிட்டவற்றை ஏவி விடும் வேலையில் திமுக ஈடுபட்டுள்ளதாக சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் வைகுண்டராஜனின் தாது மணல் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கிட்டங்கிகள் உள்ளிட்ட இடங்களில் கனிம வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வைகுண்டராஜனின் தம்பி சுகுமாரன் வைத்துள்ள நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நடந்தபோது வைகுண்டராஜன் அங்கு இல்லை. அவர் சென்னையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.