பாக், சீனாவிடம் இலங்கை ஆயுதம் வாங்க இந்தியா எதிர்ப்பு
சென்னை:இலங்கை கடற் படையும், இந்திய கடல் படையும் சேரந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபடுவது என்பது சத்தியமில்லாதது என பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பற்ற நிலைமை குறித்து முதல்வர் கருணாநிதியுடன் விவாதிக்க எம்.கே.நாராயணன் இன்று சென்னை வந்தார். இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் நாராயணன் கூறியதாவது,
தமிழக மீனவர்களின் பிரச்சனை குறித்து முதல்வர் கருணாநிதி என்னிடம் விரிவாக கூறினார். மீனவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.
கடற்படையும், கடலோர காவல்படையும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக கடற்படை அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்துவேன்.
தமிழ்நாட்டில் குறிப்பாக தூத்துக்குடி உள்பட முக்கிய பகுதிகளில் மீனவர்களுக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கப்படும்.
மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது சர்வதேச எல்லையை கடப்பது தவிர்க்க முடியாதது. பிழைப்புக்காக செல்லும் மீனவர்களை சுடுவதையும் ஏற்க முடியாது.
தமிழக மீனவர்கள் சுடப்படுவது குறித்து இலங்கை கடற்படையினரிடம் கேட்டபோது. தமிழக மீனவர்களை நாங்கள் சுட்டதும் இல்லை என அவர்கள் கூறினர். மேலும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மாட்டோம் என இலங்கை அரசு உறுதியளித்துள்ளது.
புலிகளை சமாளிக்க பாகிஸ்தான் அல்லது சீனாவிடம் இலங்கை ஆயுதம் வாங்குவதை ஏற்க முடியாது. இந்த பிராந்தியத்தில் பெரிய சக்தி இந்தியா. இதனால் தனக்குத் தேவையான ஆயுகங்களுக்கு இந்தியாவைத் தான் இலங்கை தொடர்பு கொள்ள வேண்டும்.
அதை விடுத்து சீனாவையோ பாகிஸ்தானையோ இலங்கை அணுகுவதை இந்தியா ஏற்காது.
தீவிரவாத அமைப்பு என பெயரெடுத்த எல்டிடிஈ வசம் போர் விமானங்கள் இருப்பதை ஏற்க முடியாது. தாக்குதலுக்கு உதவும் எந்த ஆயுதமும் இலங்கைக்கு தரப்படாது. அதே நேரம் ரேடார்கள் போன்ற தற்காப்பு ஆயுதங்களைத் தருவோம்.
இலங்கை கடற் படையும், இந்திய கடல்படையும் இணைந்து கூட்டு ரோந்து செல்வது என்பது சந்தியமற்றது. எனவே புரிந்துணர்வு அடிப்படையில் இரு படைகளுக்கும் தனித்தனியாக பாதுகாப்பில் ஈடுபடலாம் என்றார் நாராயணன்.