கார்களில் சீட் பெல்ட் கட்டாயம்:தரமான ஹெல்மெட் வாங்க கால அவகாசம்
சென்னை: ஆட்டோ டிரைவர்கள் சீட் பெல்ட் அணிய தேவையில்லை என்றும், தரமான ஹெல்மெட் வாங்குவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை நகர போக்குவரத்து கூடுதல் கமிஷ்னர் சுனில்குமார் கூறியுள்ளார்.
சென்னை போன்ற மாநகராட்சிகளில் கட்டாய ஹெல்மெட் திட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
சென்னையில் கூடுதல் கமிஷ்னர் சுனில்குமார் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதில் சிலர் ஐஎஸ்ஐ ஹெல்மெட் தட்டுபாடு உள்ளதால் வாங்க முடியவில்லை என்று கூறினர். இதனால் அபராதம் விதிப்பது நிறுத்தப்பட்டது.
இதனால் ஹெல்மெட் அணியாதவர்கள் போலீஸாரால் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்து சுனில்குமார் கூறுகையில்,
சோதனையில் ஹெல்மெட் அணியாத 1,500 பேர் எச்சரித்து அனுப்பப்பட்டனர். அபராதம் செலுத்தியவர்கள் மிக குறைவு. கட்டாய ஹெல்மெட் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தரமான ஹெல்மெட் வாங்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு கால நிர்ணயம் எதையும் தெரிவிக்க முடியாது.
பின்னால் அமர்ந்து வருபவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் வாகன ஓட்டி வருபவரிடமிருந்து தான் அபராதம் வசூலிக்கப்படும்.
இதேபோல் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். அணியாதவர்களிடமிருந்தும் அபராதம் வசூலிக்கப்படும். ஆனால் ஆட்டோ டிரைவர்கள் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காரின் வேகத்தை விட ஆட்டோ வேகம் குறைவுதான் என்பது காரணம் என்றார்.