கள்ளத்தொடர்பை விடாத மனைவி;ஓட ஓட விரட்டிக் கொன்ற கணவன்
சென்னை: மனைவியின் கள்ளத்தொடர்பால் ஆத்திரமடைந்த கணவன், அவரை சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றார்.
சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரது மனைவி குமாரி. லாரி டிரைவராக உள்ளார் பாலமுருகன். இவர்களுக்கு சுரேஷ் என்கிற 7 வயது மகனும் உள்ளான்.
இந்த நிலையில், சாலை போடும் வேலைக்குச் சென்றபோது, குமாரிக்கும், கிண்டியைச் சேர்ந்த கோபால் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இது பாலமுருகனுக்குத் தெரிய வந்தது.
மனைவியை இனிமேல் வேலைக்குப் போக வேண்டாம் என்று கூறினார். ஆனால் அதை குமாரி கேட்கவில்லை. தொடர்ந்து வேலைக்குப் போனார், கோபாலுடனும் பழகி வந்தார்.
இதனால் பிரச்சினை உருவானது. இதையடுத்து தனது உறவினர்களிடம் முறையிட்ட குமாரி, அவர்களை வைத்து பாலமுருகனை வீட்டை விட்டு வெளியேற்றினார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் அவ்வப்போது குமாரியிடம் வந்து தகராறு செய்து வந்தார். இதனால் குமாரி தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.
இந்த நிலையில், நேற்று இரவு குமாரியின் தாயார் வீட்டுக்குச் சென்றார். அங்கு குமாரி மட்டும் தனியாக இருந்தார். அவரிடம் பாலமுருகன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து குமாரி வீட்டை விட்டு வெளியேறி தனது உறவினர் வீட்டுக்கு விரைந்தார்.
அவரைப் பின் தொடர்ந்த பாலமுருகன், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து குமாரியை சரமாரியாக வெட்டினார். உயிர் பிழைப்பதற்காக குமாரி தெருவில் ஓடினார். ஆனால் விடாமல் துரத்திய பாலமுருகன், குமாரியை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்றார்.
பின்னர் அவர் கத்தியுடன் முடிச்சூர் நோக்கி விரைந்தார். அவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications