4 தொகுதிகளில் வேட்பு மனு- ஜெ மீது நடவடிக்கைதேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக பொதுச் செயாளர் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி அறிவித்துள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை, புவனகிரி, தர்மபுரி ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.
டான்சி ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் வேட்பு மனு தள்ளுபடியாகலாம் என்று கருதி 4 இடங்களில் அடுத்தடுத்து மனு தாக்கல் செய்து புரட்சி செய்தார் ஜெயலலிதா. (அந்த 4 மனுக்களும் தள்ளுபடியாகிவிட்டன என்பது வேறு விஷயம்)
இதுகுறித்து திமுக எம்பி குப்புசாமி 2001ம் ஆண்டு தேர்தல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டபடி ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக் கூடாது. ஆனால் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை, புவனகிரி, தர்மபுரி ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தாம் ஏற்கனவே 2 தொகுதிகளில் போட்டியிடுவதை மறைத்துவிட்டுத் தான் 2 தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு பொய்யான அபிடவிட் தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து 2002ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் குப்புசாமி. அங்கு தாக்கல் செய்த மனுவில், நான் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
குப்புசாமியின் இந்த மனுவும் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலிருந்தது. இதன் பின்னர் நீதிபதிகள் தர்மராவ், பழனிவேலு ஆகியோரை கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குப்புசாமி சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஜெயலலிதா சார்பில் ஜோதி, தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ராஜகோபால் ஆகியோர் ஆஜராயினர்.
இன்று இந்த வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்,
சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. சட்டம் ஏழைக்களுக்கு மட்டுமல்ல சமுதாயத்திலுள்ள உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.
இந்த வழக்கில் சட்டம் பொதுவானது என்ற கொள்கையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக தெரிகிறது. 2 தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்த ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க மனுதாரர் புகார் கொடுத்துள்ளார். இந்த மனு மீதான குற்றசாட்டில் அடிப்படை முகாந்திரம் உள்ளது.
2 தொகுதிகளில் மனு தாக்கல் செய்ததை மறைத்து 4 தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளது, சட்ட விதிகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் கண்டும் காணாதது போல் வருத்தத்திற்குரியது. ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க கோரும் குப்புசாமி மனு மீது தேர்தல் ஆணையம் 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர்.
இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில், குறிப்பிட்ட காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் அந்த நடவடிக்கையை நிச்சயம் எடுப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications