கலாம் மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பைகருணாநிதி தடுத்து விட்டார்-விஜயகாந்த்
மதுரை:அப்துல் கலாம் 2வது முறையாக குடியரசுத் தலைவர் ஆகும் வாய்ப்பை முதல்வர் கருணாநிதிதான் தடுத்து விட்டார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதியில் தேமுதிகவின் பிரசாரத்தை விஜயகாந்த் தொடங்கியுள்ளார். அவர் பேசுகையில்,
சிறுபான்மையினருக்கு குரல் கொடுக்கிறேன், தமிழ்ப் பற்றுடன் உள்ளேன் என்று கூறும் முதல்வர் கருணாநிதி, அன்றைக்கு மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பைத் தடுத்தார். இன்றைக்கு அப்துல் கலாம் அவர்கள், 2வது முறையாக குடியரசுத் தலைவராகும் வாய்ப்பைத் தடுத்துள்ளார் கருணாநிதி.
இதுவா தமிழ்ப்பற்று?. திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், தங்களுடைய துறைச் செயலாளராக தமிழர்களாக இல்லாதவர்களைத்தான் வைத்துள்ளனர்.
கழகம்தான் குடும்பம் என்று நினைத்தவர் பேரறிஞர் அண்ணா. ஆனால் தனது குடும்பத்தையே கழகமாக மாற்றி விட்டார் கருணாநிதி. அதில் உறுதியாகவும் உள்ளார்.
திமுகவை எதிர்த்து நான் பேசியதால் வருமான வரிச் சோதனை நடத்த விட்டனர். எனது கல்யாண மண்டபத்தை இடிக்க உத்தரவிட்டனர். அங்கு தரைப்பாலம் கட்டப் போவதாக கூறினார்கள். ஆனால் இன்னும் ஒரு தூணைக் கூட அவர்கள் கட்டவில்லை.
இப்படியெல்லாம் செய்தால் பயந்து போய் விஜயகாந்த் வந்து விடுவான் என்பது அவர்களது எண்ணம். ஆனால் நான் யாருக்கும் விலை போக மாட்டேன்.
காங்கிரஸ் கட்சி தொண்டர்களே இல்லாத கட்சி. அங்கு தலைவர்கள்தான் அதிகம். அதிலும் கோஷ்டிகள் அதை விட அதிகம். அனைவருக்கும் பதவி ஆசை இருப்பதால்தான் திமுகவைச் சார்ந்துள்ளனர்.
காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று கூறிக் கொண்டு திமுக கொடிகளை ஏந்திக் கொண்டு தோரணங்களை ஏந்திக் கொண்டு எப்படி இவர்களால் காமராஜர் ஆட்சியை அமைக்க முடியும்.
கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் 5வது முறையாக தேர்தலை சந்திக்கிறது தேமுதிக. யாருடனும் நான் கூட்டணி அமைக்கவில்லை. மக்களையும், தெய்வத்தையும் மட்டுமே நம்பி நான் களத்தில் உள்ளேன் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications