எம்.ஜி.எம். தீம் பார்க்கில் பயங்கரம்:ராட்டினத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி!
சென்னை:சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், கானாத்தூர் பகுதியில் உள்ள எம்.ஜி.எம். பொழுதுபோக்குப் பூங்காவில், ராட்சத ராட்டினத்தின் சீட் பெல்ட் சரியாக இல்லாததால், பல்கலைக்கழக மாணவி 30 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் விஜிபி, எம்.ஜி.எம் ஆகிய பொழுது போக்கு பூங்காக்கள் உள்ளன. கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் சிலர் எம்.ஜி.எம். பொழுது போக்குப் பூங்காவிற்கு வந்தனர்.
அங்கிருந்த ராட்சத ராட்டினத்தில் ஏறிச் சுற்றுவதற்காக மாணவிள் ஏறி அமர்ந்தனர். அப்போது ஒரு மாணவி, தனது இருக்கையில் இருந்த சீட் பெல்ட் சரியாக இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் குறுக்கிட்ட பூங்கா ஊழியர், எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று கூறி குத்து மதிப்பாக அந்த சீட் பெல்ட்டை கட்டி விட்டு ராட்டினத்தை இயக்க பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
ராட்டினம் கிளம்பி மேலே சென்று சுற்றத் தொடங்கியதும், சீட் பெல்ட் கழன்று அந்த மாணவி 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். பெரும் அலறலுடன் கீழே விழுந்த அந்த மாணவி அதிர்ஷ்டவசமாக ஒரு மரத்தின் மீது விழுந்தார்.
இதில் மரத்தின் கிளைகள் முறிந்து கீழே விழுந்ததால், அந்த மாணவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஆனால் அவர் படுகாயமடைந்து கீழே விழுந்து துடித்தார்.
அதிர்ந்து போன சக மாணவிகள் ஓடி வந்து அந்த மாணவியைத் தூக்கினர். ஆனால் பொழுது போக்கு பூங்கா ஊழியர்கள் ஒருவர் கூட விழுந்து கிடந்த மாணவிக்கு உதவ முன்வராமல் கல் போல நின்றுள்ளனர்.
அத்தோடு நில்லாமல், உடனடியாக இடத்தைக் காலி செய்யுங்கள் என்று மிருக மனத்துடன் மாணவிகளை விரட்டியுள்ளனர்.
படுகாயமடைந்த அந்த பரிதாபத்துக்குரிய மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எலும்பு முறிவும், பல இடங்ளில் தசைகள் கிழிந்தும் உள்ளதாம்.
இந்த சம்பவம் தொடர்பாக சரவணன், இளங்கோ ஆகிய இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று பொழுது போக்குப் பூங்கா திறக்கப்படவில்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மாதிரியான சம்பவங்கள் பலமுறை இந்த பூங்காவில் நடந்துள்ளதாம். பலர் கை ஒடிந்து, கால் ஒடிந்து போயுள்ளனராம். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கக் கூடாது என்று மிரட்டி அனுப்பி வைப்பார்களாம்.
மீறி யாராவது புகார் கொடுத்தாலும் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பி விடுவார்களாம்.
சமீபத்தில் கூட கானாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் (இங்கு வேலை பார்த்து வந்தவர்) ராட்டினத்தின் இறக்கை தலையில் பட்டு பரிதாபமாக இறந்துள்ளார்.












Click it and Unblock the Notifications