மண வீட்டார் சென்ற லாரி விபத்தில்சிக்கி 3 பேர் பலி; மணமகள் படுகாயம்
சென்னை:
சென்னை அருகே நடந்த கோர விபத்தில் திருமண வீட்டைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். மணமகள் உள்பட 37 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவருக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. இன்று காலை விழுப்புரம் அருகே கல்யாணம் நடப்பதாக இருந்தது.
இதற்காக மணமகள் வீட்டார் மினி லாரி ஒன்றில் விழுப்புரம் கிளம்பினர். நேற்று இரவு அவர்கள் சென்ற மினி லாரி, அச்சரப்பாக்கம் அருகே தொழுபேடு என்ற இடத்தில் போய்க் கொண்டிருந்தபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது.
இதில் மினி லாரி சுக்கு நூறாக நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி மணமகள் வீட்டார் துடித்தனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பக்கமாக சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியும் காரை நிறுத்தி விட்டு மக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டார்.
விபத்தில் தனலட்சுமி என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மணமகள் சங்கீதாவின் சகோதரி மாலா என்பவரும் மினி லாரி டிரைவர் ராஜேந்திரனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர்.
விபத்தில் 37 பேர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications