கலர் டிவி திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
சென்னை:
தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தத் திட்டத்தால் சமத்துவம், சமநீதி ஏற்படும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டத்தை எதிர்த்து பாலாஜி, சரவணன், சுப்ரமணியம் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்த்த திட்டத்தின் அடிப்படையில், டிவி இல்லாத வீடுகளுக்கு 14 இன்ச் வண்ணத் தொலைக்காட்சி இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இலவச டிவி என்பது தேர்தல் மோசடி. அப்பாவி வாக்காளர்களைக் கவர இலவச டிவி என்று தூண்டில் போடுகிறார்கள். இலவச டிவி திட்டத்துக்காக 2006-07ம் ஆண்டுக்கு ரூ. 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை தேவையற்ற செலவாக கருதி இத்திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்தலின்போது ஒரு கட்சி கொடுக்கும் வாக்குறுதியானது, அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் கடமையாகி விடுகிறது.
மக்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்ப முடியாது. அதைத் தவறாக நினைக்கக் கூடாது. கலர் டிவி இல்லாத அனைவருக்கும் அரசின் சார்பில் கலர் டிவி தரப்படுகிறது. குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் இது வழங்கப்படவில்லை.
சமூக பொருளாதார கண்ணோட்டத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய் வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், ஜனார்த்தன ராஜா ஆகியோர் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது சென்னை முதன்மை பெஞ்ச்சில் அமர்ந்து இரு நீதிபதிகளும் வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இதையடுத்து நேற்று நீதிபதிகளின் அறையில் அமர்ந்து மதுரையில் தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை இரு நீதிபதிகளும் அறிவித்தனர்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், வழக்கை தொடர மனுதாரர்களுக்கு உரிமை இல்லை என்று அரசுத் தரப்பு கூறுவதை ஏற்க முடியாது. காரணம், பொதுமக்களின் பணம் விரயம் செய்யப்படுகிறது போன்ற வாதங்கள் மனுதாரர்களால் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை ஆழ்ந்து பார்க்கும்போது, தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பதை முறைகேடு என்ற முத்திரையைப் பொருத்த முடியாது. பொழுதுபோக்கிற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் என்றும், இதுபோன்ற திட்டத்திற்கு அரசியல் சட்டம் எந்த உரிமையையும் வழங்கவில்லை என்றும், ஆகவே கஜானாவை விரயம் செய்யும் திட்டம் என்றும் மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது.
தமிழக அரசின் இந்தத் திட்டம் சமூக நீதியைப் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இந்த்த திட்டத்திற்கு எந்த எம்.எல்.ஏ.வும் சட்டசபையில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு முடிவை எடுக்கும்போது அதுவும் எந்த மக்கள் பிரதிநிதியும் எதிர்க்காத போது, அது சட்டப்பூர்வமான முடிவல்ல என்று கூற முடியாது.
இந்தத் திட்டத்தை சுதந்திரமாக செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, அடித்தட்டு மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட இலவச கலர் டிவி திட்டத்தை சட்டவிரோதமானது என்றோ, ஒருதலைபட்சமானது என்றோ, பொதுமக்களின் பணம் விரயம் செய்யப்படுகிறது என்றோ கூற முடியாது.
தொலைக்காட்சியானது, பொதுமக்களின் நலனை முன்னேற்றும் கருவியாக மாறி விட்டது. ஆகவே இந்தத் திட்டம் மோசடியான திட்டம் என்றோ அல்லது சட்டவிரோதமான திட்டம் என்றோ கூற முடியாது. சமுத்துவத்தை ஏற்படுத்துவது ஒரு அரசின் கடமை என்பதாலும், சமூக பொருளாதார அரசியல் கலாச்சார உரிமைகளை பாதுகாப்பது அதன் கடமை என்பதாலும் இந்தத் திட்டத்தை தேவையற்ற திட்டமாக கருத முடியாது என்று கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications